

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களின் மூலம் பிரச்சாரம் மேற்கொள்ள ஊடகப் பிரிவு தேர்தல் அதிகாரி திமுகவுக்கு அனுமதியளித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக மாணவரணி செயலாளர் கடலூர் இள.புகழேந்தி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பேஸ்புக், ட்விட்டர், இ-மெயில், உள்ளிட்ட இணையதளங்கள் வாயிலாக பிரச்சாரம் மேற்கொள்ள விரும்புவதாக பிரச்சார ஊடக பிரிவு தேர்தல் அதிகாரியிடம் மனு செய்திருந்தோம். இந்நிலையில் தேர்தல் பிரச்சார ஊடக பிரிவு தேர்தல் அதிகாரி எங்கள் கோரிக்கைக்கு அனுமதியளித்துள்ளார்.
இதையடுத்து, ஸ்ரீரங்கம் தொகுதியில் பேஸ்புக், ட்விட்டர், இ-மெயில் உள்ளிட்டவை மூலம் திமுக மாணவரணியினர் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளனர். மேலும், வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பது, திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபடுவது, தெருமுனைப் பிரச்சாரம் செய்வது போன்ற பணிகளிலும் ஈடுபடவுள்ளோம்.
இவ்வாறு இள.புகழேந்தி கூறியுள்ளார்.