மின்சார கொள்முதலில் முறைகேடு எதுவும் இல்லை: நீதிமன்றத்தில் அரசு பதில் மனு தாக்கல்

மின்சார கொள்முதலில் முறைகேடு எதுவும் இல்லை: நீதிமன்றத்தில் அரசு பதில் மனு தாக்கல்
Updated on
1 min read

சென்னை உள்ளகரத்தைச் சேர்ந்த சி.செல்வராஜ் என்பவர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில், ‘தமிழகத்தில் 2001 முதல் 2014-ம் ஆண்டு வரை மின்சாரம் கொள்முதல் செய்தபோது கூடுதல் விலை கொடுத்ததால் ரூ.1 லட்சம் கோடிக்கு முறைகேடு நடந்துள்ளது. இதுகுறித்து சிறப்பு விசாரணைக் குழு விசாரிக்க உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக தலைமை நிதிக் கட்டுப்பாட்டாளர் கே.சுந்தரவதனம் பதில் மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:

மனுதாரர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றி, இப் போது ஓய்வூதியம் பெற்று வரு கிறார்.

பத்திரிகை செய்தி மற்றும் தனியார் இணையதளத்தில் தெரி விக்கப்பட்ட கற்பனையான கருத்துகள் அடிப்படையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. மின்வாரிய அதிகாரிகளை இழிவு படுத்துவதே இவ்வழக்கின் நோக்கமாகும். யாரோ சிலர் தூண்டுதலின் பேரில் பொறுப்பற்ற குற்றச்சாட்டுகளை மனுதாரர் கூறியுள்ளார்.

மின்சாரம் கொள்முதலின்போது மின்சார சட்ட விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று கூறுவது முற்றிலும் தவறு. மின்சார கொள்முதல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடந்தது. தேவை மற்றும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டே மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. இதுதொடர்பான கணக்குகளை தலைமை தணிக்கை அதிகாரி தணிக்கை செய்தார்.

புதிய மின் திட்டங்களின் வணிக ரீதியான செயல்பாடு அண்மையில் தொடங்கியது. ஏற்கெனவே உள்ள மின்உற்பத்தி நிலையங்கள் முழு அளவில் செயல்படுகின்றன. எனவே, மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோரைக் கொண்ட முதல் அமர்வில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கு தொடர்பாக மேலும் சில விளக்கம் அளிக்க வேண்டியிருப்பதால் 2 வார அவகாசம் அளிக்க வேண்டும் என்று கோரினார்.

இதையடுத்து வழக்கு விசாரணையை ஏப்ரல் 21-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in