Published : 23 Feb 2015 03:44 PM
Last Updated : 23 Feb 2015 03:44 PM

தமிழக - இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு

தமிழக மற்றும் இலங்கை மீனவர் பிரதிநிதிகள் இடையிலான பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்படுவதாக இலங்கை மீன்பிடித்துறை அமைச்சர் துலிப் வெதாரச்சி தெரிவித்துள்ளார்.

தமிழக-இலங்கை இரு நாட்டு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், கடந்த 27.01.2014 அன்று சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள மீன்வளத் துறை இயக்குநர் அலுவலக கூட்ட அரங்கில் தமிழக இலங்கை மீனவப் பிரதிநிதிகளின் முதல்கட்டப் பேச்சுவார்த்தையும், 12.05.2014 அன்று கொழும்பில் உள்ள ஹரிட்டாஸ் அரங்கத்தில் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையும் நடைபெற்றது.

இந்த இரண்டு கட்டப்பேச்சுவார்த்தையிலும், தமிழக விசைப்படகு மீனவர்கள் தடை செய்யப்பட்ட இரட்டை மடி, ரோலர் மடி, சுருக்கு மடி மீன்பிடிமுறைகளை பயன்படுத்தி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிப்பதை முற்றிலுமாக கைவிட வேண்டும் என இலங்கை மீனவப் பிரநிதிகளால் கோரிக்கை வைத்தனர்.

ஆனால் இந்த மீன்பிடி முறைகளை மாற்றிக் கொள்ள மூன்று வருட காலம் அவகாசம் தேவை எனவும், பதிலாக இலங்கை கடற்பரப்பில் ஆண்டுக்கு 120 நாட்களுக்கு தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு பதிலாக 90 நாட்களாக குறைத்துக் கொள்வதாகவும் தமிழக மீனவர்கள் தெரிவித்தனர்.

ஆனால் இலங்கையில் நடைபெற்ற 30 ஆண்டுகால உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்ட இலங்கை மீனவர்களின் கடல் வளங்களை தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்து எங்களின் வாழ்வாதாரத்தை அழித்து வருவதாகவும் குற்றஞ்சாட்டினர். அதேசமயம் பாரம்பரியமாக இரு நாட்டு மீனவர்களும் மீன்பிடித்து வந்த கடற்பரப்பில் தாங்கள் தொழில் செய்யும் உரிமையை இலங்கை மீனவர்கள் மறுக்கக்கூடாது எனவும் தமிழக மீனவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. இதனால் இரண்டு கட்டப் மீனவப் பேச்சுவார்த்தைகளிலும் சுமுக உடன்பாட்டினை எட்ட முடியாமல் போனது.

இலங்கையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டிருக்கிற சூழலில் இந்திய, இலங்கை அரசுகள் மூன்றாம் கட்ட மீனவப் பேச்சுவார்த்தைகள் நடத்த முயற்சிகள் எடுத்தன. அதனை தொடர்ந்து சென்னையில் மார்ச் 05 அன்று மூன்றாம் கட்ட மீனவப் பேச்சு வார்த்தை நடைபெறும் என தமிழக மீன் வளத்துறை செயலர் டாக்டர் விஜயக்குமார் அறிவித்தார். இந்நிலையில் இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் துலிப் வெதாரச்சி திங்கட்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

''வாரத்திற்கு மூன்று நாட்கள் என ஆண்டுக்கு 120 நாட்கள் வீதம் இலங்கையின் வடக்கு கடற்பரப்பில் மீன்பிடிக்க தமிழக மீனவர்கள் அனுமதி கோரியுள்ளனர். ஆனால் இது குறித்து இலங்கை மீனவர்களுடன் கலந்துரையாடிய பின்னரே தீர்மானிக்க வேண்டும். எனவே மார்ச் 05 அன்று சென்னையில் நடைபெறவிருந்த மீனவப் பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்படுகிறது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x