Published : 17 Feb 2015 10:14 AM
Last Updated : 17 Feb 2015 10:14 AM

முதல்வர் வேட்பாளராக அன்புமணி அறிவிப்பு: பாமக முடிவு ஒருதலைபட்சமானது - கூட்டணி கட்சியான பாஜக கருத்து

பாமக முதல்வர் வேட்பாள ராக அன்புமணி ராமதாஸை அறிவித்துள்ளது ஒருதலைப் பட்சமானது என்று பாஜக கருத்து தெரிவித்துள்ளது.

கடந்த மக்களவை தேர்தலின் போது பாஜகவுடன் தேமுதிக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்தன. இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மத்திய பாஜக அரசின் நிலைப்பாட்டை விமர்சித்து சில மாதங்களுக்கு முன்பு கூட்டணியில் இருந்து மதிமுக விலகியது.

கூட்டணியில் உள்ள பாமகவும் மத்திய அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து வருகிறது. இதனால், அந்தக் கட்சியும் கூட்டணியில் இருந்து வெளியேறும் என கூறப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் சேலத்தில் நடந்த பாமக பொதுக்குழுவில் 2016 சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளராக அன்புமணி ராமதாஸ் அறிவிக்கப்பட்டார்.

பாமகவின் இந்த முடிவு குறித்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறும்போது, ‘‘ஒரு கூட்டணியில் இருக்கும்போது எந்தக் கட்சியும் தன்னிச்சையாக முதல்வர் வேட்பாளரை அறிவிக்க முடியாது. கூட்டணி கட்சிகள் அனைத்தும் சேர்ந்து பேசித்தான் முதல்வர் வேட்பாளரை முடிவு செய்ய வேண்டும். ஆனால், பாமக ஒருபடி மேலே போய் அன்புமணி ராமதாஸை தன்னிச்சையாக முதல்வர் வேட்பாளர் என அறிவித்துள்ளது. இரு ஒருதலைப்பட்சமானது; தன்னிச்சையானது; கூட்டணி கொள்கைக்கு விரோதமானது. இதை பாஜக கருத்தில் கொண்டுள்ளது. கட்சி மேலிடம் உரிய நடவடிக்கை எடுக்கும்’’ என்றார்.

எச்.ராஜாவின் இந்தக் கருத்து பாமகவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மதிமுகவை தொடர்ந்து பாமகவும் கூட்டணியிலிருந்து வெளியேறும் சூழல் உருவாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x