Published : 26 Feb 2015 09:36 AM
Last Updated : 26 Feb 2015 09:36 AM

திறந்தவெளியில் இயற்கை உபாதைகளை கழிக்கும் விவகாரம்: ரயில்வே, மாநகராட்சி அதிகாரிகள் நேரில் ஆஜராக உத்தரவு

ரயில் பாதையோரம் பொதுமக்கள் இயற்கை உபாதைகளை கழிக்கும் விவகாரம் தொடர்பாக தென்னக ரயில்வே மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நேரில் ஆஜராக தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்னிந்திய அமர்வு உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த எஸ்.பி.சுரேந்திரநாத் கார்த்திக், பசுமை தீர்ப்பாயத்தின் தென்னிந்திய அமர்வில் கடந்த ஆண்டு மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது:

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை ரயில் நிலையம் - வியாசர்பாடி ஜீவா ரயில்நிலையம் இடையே பொதுமக்கள் ரயில் பாதை ஓரங்களில் இயற்கை உபாதைகளை கழித்து வருகின்றனர். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 60 லட்சத்துக்கு மேற்பட்டோர் வசிக்கின்றனர். ஆனால் மாநகராட்சி சார்பில் 900 கழிப்பறைகள் மட்டுமே கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் 500 கழிப்பறைகள் மட்டுமே சரியாக இயங்கி வருகின்றன.

மக்கள் தொகைக்கு ஏற்றவாறு போதுமான பொதுக்கழிப்பிடங்கள் கட்டப்படவில்லை. இதனால் பொதுமக்கள் திறந்த வெளியில் இயற்கை உபாதைகளை கழிப்பதால், சுகாதாரக் கேடு ஏற்படுவதுடன், சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படுகிறது. இதை தடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு, அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி எம்.சொக்கலிங்கம், தொழில்நுட்பத்துறை உறுப்பினர் பேராசிரியர் ஆர்.நாகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது “திறந்த வெளியில் இயற்கை உபாதைகளை கழிப்பதை தடுப்பதற்கான தீர்வுகள் குறித்து, ரயில்வே மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்ட அமர்வின் உறுப்பினர்கள், மனு மீதான அடுத்த விசாரணையை மார்ச் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x