Published : 25 Feb 2015 10:10 AM
Last Updated : 25 Feb 2015 10:10 AM

நீதிபதிகள் நியமனம் தொடர்பான வழக்கு தள்ளிவைப்பு

சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி காலிப் பணியிடங்களை ஒரேநேரத்தில் நிரப்பக் கோரியும், அனைத்து சமூகத்தினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் அளிக்க வலியுறுத்தியும் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இவ்வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், பி. ஆர். சிவக்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சங்கத்தின் சார்பில் வழக்கறிஞர் முத்துராமலிங்கம் ஆஜராகி வாதிடுகையில், ‘‘நீதிபதிகள் நியமனம் தொடர்பாக தலைமை நீதிபதியிடம் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் மனு கொடுத்தனர். அதையடுத்து, வழக்கறிஞர்கள் சங்கப் பிரதிநிதிகளை அழைத்து தலைமை நீதிபதி பேசினார். அந்த பேச்சுவார்த்தையின்போது நீதிபதி வி. ராமசுப்பிரமணியன் இருந்தார். இந்த நிலையில், இவ்வழக்கை அவர் விசாரித்தால் சரியாக இருக்காது’’ என்று வாதிட்டார்.

நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் கூறுகையில், ‘‘இந்த வழக்கை நான் உள்ளிட்ட அமர்வு விசாரிக்கும்படி, தலைமை நீதிபதி பட்டியலிட்டுள்ளார். எனவே, நான் இந்த வழக்கை விசாரிப்பேன்’’ என்றார்.

பின்னர், வழக்கறிஞர் முத்துராமலிங்கம் கூறுகையில், ‘‘சென்னை உயர் நீதிமன்ற வழங்கறிஞர்கள் சங்கத் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் டெல்லியில் இருப்பதால், வழக்கை தள்ளிவைக்க வேண்டும்’’ என்றார்.

இதையடுத்து, இவ்வழக்கை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x