Published : 17 Feb 2015 10:13 AM
Last Updated : 17 Feb 2015 10:13 AM

தேக்கடி கார் பார்க்கிங் இடத்தில் ஆய்வு செய்ய தமிழக, கேரள அரசுகள் இணைந்து ரூ.14.60 லட்சம் செலுத்த வேண்டும்: பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

தேக்கடியில் கார் பார்க்கிங் அமைக்கும் இடத்தில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்வதற்கான செலவுத் தொகை ரூ.14 லட்சத்து 60 ஆயிரத்தை தமிழகம் மற்றும் கேரள மாநில அரசுகள் சமமாக பங்கிட்டு செலுத்த வேண்டும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்னிந்திய அமர்வு உத்தரவிட்டுள்ளது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த எம்.எஸ்.தங்கப்பன் மற்றும் ஆபிரகாம் தாமஸ் ஆகியோர் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்னிந்திய அமர்வில் கடந்த ஆண்டு 2 மனுக்களை தனித்தனியாக தாக்கல் செய்திருந்தனர். ‘இடுக்கி மாவட்டம் தேக்கடி பகுதியில் புலிகள் பாதுகாப்பு வனப்பகுதியில் கேரள அரசு கார் பார்க்கிங் அமைத்து வருகிறது. அதற்கு தடை விதிக்க வேண்டும்’ என்று மனுவில் கோரியிருந்தனர். இந்த மனுவை விசாரித்த தீர்ப்பாயம், ‘தேக்கடியில் கார் பார்க்கிங் கட்டுமானப் பணிகளை தொடர கேரள அரசுக்கு இடைக்கால தடை விதித்தது.

இதற்கிடையே, இந்த வழக்கில் தமிழக அரசு தன்னை பிரதிவாதியாக சேர்த்துக்கொண்டு ‘கட்டுமானப் பணி நடக்கும் இடம் தமிழக அரசுக்கு சொந்தமான முல்லை பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி. அங்கு கார் பார்க்கிங் அமைக்க தடை விதிக்க வேண்டும்’ என்று வாதிட்டது. ஆனால், ‘பார்க்கிங் அமையவுள்ள இடம் வனப்பகுதியும் இல்லை. நீர் பிடிப்பு பகுதியும் இல்லை’ என கேரளம் வாதிட்டு வருகிறது.

இதைத் தொடர்ந்து ‘கார் பார்க்கிங் அமையவுள்ள இடத்தின் நிலையை அறிய 2 நபர் குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று பசுமைத் தீர்ப்பாய அமர்வு உத்தரவிட்டிருந்தது. அப்பகுதியில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய ரூ.14 லட்சத்து 60 ஆயிரம் செலவாகும் என்று இந்திய சர்வே ஜெனரல் அலுவலகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், பசுமைத் தீர்ப்பாய அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி எம்.சொக்கலிங்கம், தொழில்நுட்பத்துறை உறுப்பினர் பேராசிரியர் ஆர்.நாகேந்திரன் ஆகியோர் முன்பு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. ‘‘கார் பார்க்கிங் அமையவுள்ள இடத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்வதற்கு ஆகும் செலவு ரூ.14 லட்சத்து 60 ஆயிரத்தை தமிழகம் மற்றும் கேரள அரசுகள் சமமாக பங்கிட்டு பிப்ரவரி 25-ம் தேதிக்குள் பசுமைத் தீர்ப்பாயத்தில் வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும்’’ என்று உத்தரவிட்ட தீர்ப்பாயம், விசாரணையை 25-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x