

மேற்கு வங்க மாநிலத்தில் ஆட்சியராகப் பணிபுரிந்த மதுரையை சேர்ந்த ஸ்ரீபிரியா ரெங்கராஜன் உடல் நலக்குறை வால் நேற்று மரணம் அடைந்தார்.
மதுரை கே.கே.நகரை சேர்ந்தவர் ஸ்ரீபிரியா ரெங்கராஜன் (42). ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர், மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்ட ஆட்சியராகப் பணிபுரிந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீபிரியாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. தொடர்ந்து மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், நேற்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது உடலுக்கு உயர் நீதிமன்ற நீதிபதி டி.ஹரிபரந்தாமன், கிரானைட் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்திவரும் சட்ட ஆணையர் உ.சகாயம் மற்றும் அதிகாரிகள், வழக்கறிஞர்கள் அஞ்சலி செலுத்தினர்.
ஸ்ரீபிரியா, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்தவர். திருமணத்துக்குப் பிறகு ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றார். மேற்கு வங்கத்தில் 2003-ல் ஐஏஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார்.
ஹூக்ளியில் இவர் ஆட்சியராகப் பணியாற்றியபோது சிங்கூர் மற்றும் நந்திகிராம் பகுதிகளில் தனியார் நிறுவனத்திடமிருந்து அரசு நிலத்தை மீட்பதில் இவர் முக்கிய பணியாற்றினார். ஸ்ரீபிரியாவின் கணவர் டி.லஜபதிராய் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞராக உள்ளார். இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர்.