மீண்டும் ஆப்கானிஸ்தான் வந்தால் சுட்டுவிடுவோம் என தீவிரவாதிகள் மிரட்டினர்: மீட்கப்பட்ட தமிழக பாதிரியார் பேட்டி
“திரும்பவும் ஆப்கானிஸ்தானுக்கு வந்தால் உன்னை சுட்டுவிடுவோம்” என்று விடுதலை செய்யும்போது தலிபான் தீவிரவாதிகள் மிரட்டினர் என்று பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமார் கூறினார்.
தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பாதிரியார் அலெக்சிஸ் பிரேம் குமார் ஆப்கானிஸ்தானில் கல்விப் பணி யாற்றி வந்தார். அவரை தலிபான் தீவிர வாதிகள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் பிடித்துச் சென்றனர். இந்நிலையில் 8 மாதங் களுக்கு பிறகு அவரை தீவிரவாதிகள் விடுவித்தனர். அவர் நேற்று முன் தினம் இரவு சென்னை வந்தார்.
பின்னர் அவர் சென்னை லயோலா கல் லூரியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
ஆப்கானிஸ்தானில் கல்வியறிவு குறைவு என்பதால் அங்குள்ள குழந்தை களுக்கு பாடம் கற்பிப்பதற்காக ஏசு சபை மூலம் கடந்த 2011-ம் ஆண்டு அங்கு சென்றேன். கல்வி கொடுத்தால் அந்த நாட்டில் அமைதி நிலவும் என்பதன் அடிப் படையில்தான் ஜே.ஆர்.எஸ் அமைப்பு கல்விப் பணியை செய்து கொண்டுள்ளது. நான் 6 ஆண்டுகளாக இலங்கையிலிருந்து வந்து இந்தியாவில் தங்கியுள்ள குழந்தை களுக்கு கல்விப் பணியாற்றிக் கொண் டிருந்தேன். அதன் பிறகுதான் ஆப்கானிஸ் தான் சென்றேன். ஆப்கானிஸ்தானில் முதல் 3 ஆண்டுகள் சந்தோஷமாகவே இருந்தேன்.
எனக்கு பயமிருந்தாலும் அங்குள்ளவர் கள் மிகவும் பாசமானவர்கள். எனவே எந்த கவலையும் இன்றி பணி செய்து வந்தேன். நான் பணி செய்த பள்ளிக்கூடம் நீண்ட நாட்களாக இயங்கி வருகிறது. அங்கு கிட்டத்தட்ட 200 மாணவர்கள் பயின்று வருகிறார்கள். நான் ஆரம்பத்தில் எந்த பயமுமின்றி பாலைவனத்திலேயே ஒரு மணி நேரம் நடந்து போயிருக்கிறேன்.
நான் கடத்தப்பட்ட நாளன்று மதியம் 12.30 அளவில் எனது பள்ளிக்கூடத்துக்கு சென்று கொண்டிருந்தபோது, தீவிரவாதிகள் என்னை பின்தொடர்ந்து வந்து பிடித்துச் சென்றுவிட்டனர்.
என்னை கடத்தியவர்கள் தலிபான் தீவிரவாதிகள் என்று அங்குள்ளவர்கள் கூறினர். ஆனால், அவர்கள் என்ன அமைப்பு என்பது எனக்கு தெரியவில்லை. நான் மீண்டும் ஆப்கானிஸ்தான் போவது குறித்து இயேசு சபைதான் முடிவெடுக்க வேண்டும். நான் எந்த முடிவும் எடுக்க முடியாது. ஆரம்பத்திலிருந்து கடைசி வரை பார்த்தால், அங்கிருந்த தலிபான்களில் யாராவது ஒருவர் என் மீது அன்பாகவே இருந்து வந்தார்.
நான் கடத்தப்பட்ட மறு நிமிடமே அங்கிருந்த ஒருவர், “நீங்கள் ஒன்றும் கவலைப்படாதீர்கள்.எதுவும் நடக்காது” என்றார். எனக்கு சிறு வியாதி வந்தாலும் உடனே சிகிச்சை அளிப்பார்கள். எப் போதும் 3 பேர் காவலுக்கு இருப்பார்கள். சில நாட்களில் 5 பேர் கூட காவலுக்கு இருப்பார்கள். அவர்களிடம் நான் சைகை மொழியில்தான் பேசி வந்தேன்.
ஒருவர் என் அருகிலேயே துப்பாக்கியோடு நிற்பார். இன்னொருவர் சமையல் செய்வார். மேலும் ஒருவர் வெளியில் காவலுக்காக நிற்பார். என் கை, கால் மற்றும் உடலில் சங்கிலி போட்டு 5 பூட்டு மூலம் பூட்டியிருந்தனர். தினசரி 12 மணி நேரம் வரை தூங்குவேன். உண்பதற்கு ரொட்டி போன்ற உணவுகளை தருவார்கள். சில நாட்கள் நான் பட்டினி கிடந்துள்ளேன். வேண்டுமென்று அவர்கள் என்னை பட்டினி போடவில்லை. சமைப்பதற்கு ஏதுவான சூழல் இல்லாததால் அவர்களும் என்னுடன் பட்டினி கிடப்பார்கள்.
நான் கழிப்பறை செல்லும் போது கூட ஒருவர் என்னுடனேயே இருப்பார். இதனால் எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. அடிக்கடி என்னை இடமாற்றம் செய்து கொண்டே இருப்பார்கள். பிடித்து வைத்த முதல் மாதத்தில் பிரதமர் மோடி 20 லட்சம் டாலர் தருவதாகவும் என்னை விடப்போவதாகவும் தலிபான்கள் கூறினர். ஆனால் அவர்கள் என்னை விடவில்லை. மாறாக வேறு இடத்துக்கு அழைத்துச் சென்றனர். அதன் பிறகு பணம் பற்றி எதுவும் பேசவில்லை.
என்னை விடுதலை செய்யும்போது, “திரும்ப ஆப்கானிஸ்தானுக்கு வந்தால் உன்னை சுட்டு விடுவோம்” என்று இறுதியாக மிரட்டினார்கள். நான் விடுவிக்கப்பட்டதற்காக பிரதமர் மோடிக்கும், இயேசு கிறிஸ்துவுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மிகவும் முக்கியமாக தமிழக அரசு அதிகாரிகள் என்னை தாயகம் அழைத்து வந்திருக்கிறார்கள் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
