Published : 23 Feb 2015 11:46 AM
Last Updated : 23 Feb 2015 11:46 AM

ரவுடி கொலையில் பெண் கைது: கணவரின் கொலைக்கு பழி வாங்கினார்

எழும்பூரில் ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை எழும்பூர் ஆல்பர்ட் திரையரங்கம் அருகே உள்ள டாஸ்மாக் மதுக்கடை முன்பு கடந்த 9-ம் தேதி டி.வி.செந்தில் (45) என்ற ரவுடியை 7 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்தது.

இந்த கொலை வழக்கு தொடர்பாக எழும்பூர் போலீஸார் விசாரணை நடத்தி சரவணன் என்பவர் உட்பட 7 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப் பட்ட விசாரணையில், பெண் ஒருவர் பணம் கொடுத்து கொலை செய்ய சொன்னதால் செய்தோம் என்று தெரிவித்துள்ளனர். அதைத் தொடர்ந்து அந்த பெண்ணையும் எழும்பூர் போலீஸார் நேற்று கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "2013-ம் ஆண்டு ஆதம்பாக்கத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் ஏழுமலை என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருந்த டி.வி.செந்திலை கைது செய்து சிறையில் அடைத்தோம். அவர் ஜாமீனில் வெளியே வந்துவிட்டார். இந்நிலையில் அவர் கொலை செய்யப்பட்டார்.

செந்திலை கொலை செய்து கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஏழுமலையின் மனைவி கவிதா(40)தான் பணம் கொடுத்து கொலை செய்ய சொன்னது தெரியவந்தது. கணவனை கொன்ற செந்திலை கொலை செய்வதற்கு ரூ.10 லட்சம் தருவதாக கூறி, முன்பணமாக ரூ.2 லட்சம் கொடுத்ததாக கைதானவர்கள் கூறினர். இதனைத் தொடர்ந்து கவிதாவை நேற்று காலையில் கைது செய்தோம்" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x