நாட்டியாஞ்சலிக்கு எதிர்ப்பு தெரிவித்து சிதம்பரம் நடராஜர் கோயிலில் 3 தீட்சிதர்கள் உண்ணாவிரதம்

நாட்டியாஞ்சலிக்கு எதிர்ப்பு தெரிவித்து சிதம்பரம் நடராஜர் கோயிலில் 3 தீட்சிதர்கள் உண்ணாவிரதம்
Updated on
1 min read

சிதம்பரம் நடராஜர் கோயிலில் நாட்டியாஞ்சலி விழாவை நடத்தக் கூடாது என்று 3 தீட்சிதர்கள் உண்ணாவிரத்தில் ஈடுபட்டதால் கோயிலில் பரபரப்பு ஏற்பட்டது.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நாட்டியாஞ்சலி விழா நடப்பது வழக்கம். இந்த நாட்டியாஞ்சலி விழாவை கோயிலில் நடத்தக்கூடாது, அது கோயில் புராணத்துக்கும், இறையாண்மைக்கும் எதிரானது என்று கடந்த 33 வருடங்களாக கைலாச சங்கர தீட்சிதர் என்பவர் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.

இந்நிலையில் பொதுதீட்சி தர்கள் ஆதரவுடன் தீட்சிதர்களால் ஆரம்பிக்கப்பட்ட தில்லை நாட்டியாஞ்சலி டிரஸ்ட் என்ற அமைப்பினர் கோயிலில் நாட்டி யாஞ்சலி விழாவை இந்த ஆண்டு நடத்துகின்றனர். கடந்த 33 வருடங்களாக கோயிலில் நாட்டியாஞ்சலி விழா நடத்தி வந்த சிதம்பரம் நாட்டியாஞ்சலி டிஸ்ட் அமைப்பை சேர்ந்தவர்கள் தற்போது நகரில் வேறு இடத்தில் விழாவை நடத்துகின்றனர்.

இந்நிலையில் நேற்று காலை கோயிலில் உள்ள பொதுதீட்சிதர்கள் அலுவலகம் அருகில் கைலாச சங்கர தீட்சிதர், அவரது மகன் ஆனந்த நடராஜ தீட்சிதர், உறவினர் ராஜா தீட்சிதர் ஆகியோர் கோயிலுக்குள் நாட்டி யாஞ்சலியை நடத்தக் கூடாது என்று திடீர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

கோயில் செயலாளர் பாஸ்கர தீட்சிதர் இதுகுறித்து சிதம்பரம் நகர போலீஸில் புகார் செய்தார். இதனைத் தொடர்ந்து வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் சீனுவாசன் தலைமையில் சமா தான பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.

டிஎஸ்பி சுந்தரவடிவேல், இன்ஸ்பெக்டர் முருகானந்தம், கோயில் செயலாளர் பாஸ்கர தீட்சிதர், நவமணி தீட்சிதர், சங்கர் தீட்சிதர் மற்றும் கைலாச சங்கர தீட்சிதர், அவரது மகன் ஆனந்த நடராஜ தீட்சிதர், உறவினர் ராஜா தீட்சிதர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதில் இப்பிரச்சினையை நீதிமன்றம் மூலம் தீர்த்துக் கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து கோயிலில் உண்ணாவிரதம் இருந்து 3 தீட்சிதர்களும் போராட்டத்தை முடித்துக்கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in