Published : 08 Feb 2015 10:55 AM
Last Updated : 08 Feb 2015 10:55 AM

ஸ்ரீரங்கம் யாத்ரீகர் நிவாஸில் தங்கியிருந்த அதிமுகவினர் 900 பேர் வெளியேற்றப்பட்டனர்: திமுக புகார் எதிரொலியாக அதிரடி நடவடிக்கை

ஸ்ரீரங்கத்தில் பக்தர்களுக்காக யாத்ரீகர் நிவாஸ் விடுதி கொள்ளிடக் கரையான பஞ்சக் கரையில் ரூ.47.9 கோடி செலவில் கட்டப்பட்டு, அண்மையில் திறக்கப்பட்டது.

ஆயிரம் பேர் தங்கும் இந்த விடுதியில், ஸ்ரீரங்கம் இடைத் தேர்தல் பிரச்சாரப் பணிக்காக வெளி மாவட்டங்களிலிருந்து வந்த அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் தங்கியுள்ளனர். இதனால் வெளியூர்களிலிருந்து வரும் பக்தர்கள் தங்குவதற்கு இடமில்லை. யாத்ரீகர் நிவாஸ் தங்கும் விடுதி அதிமுகவின் தேர்தல் அலுவலகமாக செயல்படுகிறது என்று திமுக வேட்பாளர் என்.ஆனந்த், நேற்று முன்தினம் திருச்சி வந்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனாவிடம் புகார் அளித்தார்.

இதைத் தொடர்ந்து ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி உத்தரவின்பேரில், ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் வீ.மனோ கரன் தலைமையில் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் நேற்று யாத்ரீகர் நிவாஸ் தங்கும் விடுதிக்குச் சென்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.

இந்த விடுதியில் தங்கியிருந்த 900-த்துக்கும் மேற்பட்ட அதிமுகவினரை அங்கிருந்து உடனடியாக வெளியேற்றினர். சிலர், தங்களுக்கு 8-ம் தேதி(இன்று) காலை வரையில் நேரம் இருக்கிறது. தற்போது காலி செய்ய முடியாது என கூறியதைத் தொடர்ந்து, போலீஸாரின் உதவியுடன் அவர்களை கட்டாயமாக வெளியேற்றும் நடவடிக்கை நேற்று இரவு வரையில் தொடர்ந்து நடைபெற்றது. தேர்தல் அதிகாரிகளின் இந்த அதிரடி நடவடிக்கையால் அதிமுகவினர் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x