Published : 20 Feb 2015 10:16 AM
Last Updated : 20 Feb 2015 10:16 AM

ஊழியர்கள் ஓய்வறையில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களை அகற்ற வேண்டும்: தனியார் நிறுவனத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

வேளச்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியர்களின் ஓய்வறையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை அகற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை வேளச்சேரி சாலையில் உள்ள ரேப்டகோஸ் பிரெட் நிறுவன தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:

எங்கள் நிறுவனத்தில் 10 பெண்கள் உட்பட 78 பேர் பணிபுரிகிறோம். ஊழியர்கள் பணிபுரிகிறார்களா, இல்லையா என்பதை கண்காணிக்க நிறுவனத்தின் அனைத்து இடங்களிலும் 38 கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. காலை 11 முதல் 11.15 வரையிலும், மாலை 3 முதல் 3.15 மணி வரையிலும் ஓய்வு நேரம் பின்பற்றப்படுகிறது.

இந்நிலையில், ஓய்வறைகளிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதால் எங்களது தனிமை பாதிக்கப்படுகிறது. பெண்கள் ஓய்வறைகளிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. எனவே, ஓய்வறையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை அகற்றுவதற்கு நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.எஸ்.கர்ணன், ‘‘ஓய்வறை என்பது ஊழியர்களின் தனிமைப் பகுதி. அங்கு தயாரிக்கப்பட்ட பொருட்களோ, மூலப் பொருட்களோ இல்லாத நிலையில் கண்காணிப்பு கேமரா என்பது தேவையற்றது.

எனவே, ஊழியர்களின் ஓய்வறையில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களை தொழிற்சாலை நிர்வாகம் அகற்ற வேண்டும்’’ என்று உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x