Published : 01 Feb 2015 11:13 AM
Last Updated : 01 Feb 2015 11:13 AM

புதுச்சேரியில் பாரம்பரிய கார் கண்காட்சி: அமைச்சர் ராஜவேலு தொடங்கி வைத்தார்

புதுச்சேரியில் பாரம்பரிய கார்களின் கண்காட்சியை அமைச்சர் ராஜவேலு நேற்று தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி சுற்றுலாத் துறை மற்றும் சென்னை பாரம்பரிய வாகன கழகம் சார்பாக ‘தி இந்து’ ஆதரவோடு, கடந்த 2010ம் ஆண்டு முதல் புதுச்சேரியில் ஆண்டுதோறும் பாரம்பரிய கார்களின் கண்காட்சி நடைபெற்று வருகிறது. அதேபோல், இந்த ஆண்டுக்கான பாரம்பரிய கார் கண்காட்சி நேற்று மாலை புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்றது. இந்த கண்காட்சியில் 1927, 1933, 1956 ஆகிய ஆண்டுகளில் தயாரான ஆஸ்டின், சிட்ரன், டாட்ஜ், சிங்கர், பீட்டில், மஸ்டங்க், ஜாகுவார், போர்டு பேன்சி, பியேட் போன்ற பல்வேறு வகை கார்களும், மோட்டார் பைக்குகளும் இடம் பெற்றன.

சென்னையில் இருந்து கொண்டு வரப்பட்ட 50 கார்கள், பொள்ளாச்சியில் இருந்து 8 கார்கள், புதுச்சேரியைச் சேர்ந்த 12 கார்கள் மற்றும் 10 மோட்டார் பைக்குகள் கண்காட்சியில் நிறுத்தப்பட்டிருந்தன. ஒவ்வொரு காரிலும் அந்தந்த கார்களின் உரிமையாளர், தயாரிக்கப்பட்ட ஆண்டு போன்ற விவரங்களும் குறிப்பிடப்பட்டிருந்தன. கடற்கரை சாலையில் அணிவகுத்து நின்ற கார்களின் கண்காட்சியை அமைச்சர் ராஜவேலு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அரசு செயலர் மிகிர் வர்தன், சுற்றுலா வளர்ச்சிக் கழக சேர்மன் வையாபரி மணிகண்டன், சுற்றுலாத்துறை இயக்குனர் முனுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கடற்கரை சாலையில் அணிவகுத்து நின்ற பழமையான கார்களை பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். மேலும், அந்த கார்கள் முன்பு நின்றபடி படம் எடுத்துக் கொண்டனர். இந்த கார்கள் அனைத்தும் இன்று (ஞாயிற்றுக் கிழமை) காலை 8 மணிக்கு புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு செல்கின்றன.

இதுபற்றி அமைச்சர் ராஜவேலு கூறும்போது, ‘‘ புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சியை கருத்தில் கொண்டு பாரம்பரிய கார்களின் கண்காட்சி ஆண்டு தோறும் புதுச்சேரியில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கண்காட்சியில் 1927ம் ஆண்டு முதல் 2014 வரை தயாரிக்கப்பட்ட கார்கள் இடம் பெற்றுள்ளன. 80, 85 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட கார்களை பார்க்கவும், அது பற்றி தெரிந்து கொள்ளவும் பாரம்பரிய கார் கண்காட்சி நடத்தப்படுகிறது. இது அரசுக்கும், சுற்றுலாத்துறைக்கும் மிகுந்த பெருமை சேர்க்கக் கூடிய ஒன்றாக உள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x