Published : 12 Feb 2015 09:53 AM
Last Updated : 12 Feb 2015 09:53 AM

நீதிபதிகள் நியமன விவகாரம்: வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு - உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக கோஷம்

நீதிபதிகள் நியமனம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் நேற்று நீதிமன்றத்தைப் புறக்கணித்தனர்.

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் நடந்தது. இக்கூட்டத்தில் பிரதிநிதித்துவம் இல்லாத மற்றும் மக்கள் தொகை அடிப்படையில் அதிகமாக உள்ள சமூகத்தினருக்கு வாய்ப்பு கிடைக்கும் வகையில் நீதிபதிகள் நியமன பட்டியலை தயார் செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் 18 நீதிபதிகள் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், 9 பெயர்களை மட்டும் பரிந்துரை செய்திருப்பதை கண்டிப்பதுடன், இப்பட்டியலை திரும்பப் பெற்று, 18 நீதிபதி காலிப்பணியிடங்களையும் ஒரே நேரத்தில் நிரப்பவேண்டும் என்றும் தீர்மானம் இயற்றப்பட்டது.

இந்த தீர்மான நகலை தலைமை நீதிபதி எஸ். கே. கவுலிடம் வழங்கு வதற்காக சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ் மற்றும் நிர்வாகிகள், செவ்வாய்க்கிழமை நேரில் சென்றனர். ஆனால் அவர்களை தலைமை நீதிபதி சந்திக்க மறுத்துவிட்டார். இதைக் கண்டித்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நேற்று நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

தலைமை நீதிபதி எஸ். கே. கவுல், நீதிபதி எம். எம். சுந்தரேஷ் ஆகியோர் கொண்ட முதல் அமர்வில் நேற்று காலை வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த வழக்கறிஞர்கள், தலைமை நீதிபதியைக் கண்டித்து கோஷமிட்டனர். நீதிமன்றத்துக்குள் இருந்த வழக்கறிஞர்களையும் வெளியேறுமாறு கேட்டுக் கொண்டனர்.

இதனால் நீதிமன்ற நடவடிக்கை கள் சிறிதுநேரம் நிறுத்தப்பட்டது. பின்னர், உயர் நீதிமன்ற வளாகத்தில் ஊர்வலமாகச் சென்ற வழக்கறிஞர்கள் மீண்டும் முதல் அமர்வு நீதிமன்றத்துக்கு வந்து தலைமை நீதிபதிக்கு எதிராக கண்டனக் குரல் எழுப்பினர். அப் போதும் நீதிமன்றப் பணிகள் சிறிதுநேரம் பாதித்தது. இதன் காரணமாக நேற்று சில நீதிமன் றங்கள் தவிர, மற்ற நீதிமன்றங்களில் பணிகள் பாதித்தன.

பெண் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவி வி.நளினி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில், உயர் நீதிமன்றத்தில் காலியாகவுள்ள 18 நீதிபதி பணியிடங்களை நிரப்பும்போது, பெண் வழக்கறிஞர்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நீதிபதிகள் நியமனத்துக்கான பெயர்ப் பட்டியலை நீதிபதிகள் குழுவுக்கு அனுப்பும் முன்பு, வழக்கறிஞர்கள் சங்கத்தினருடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தினரும் நேற்று நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டத்தில் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x