Published : 13 Feb 2015 10:16 AM
Last Updated : 13 Feb 2015 10:16 AM

3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூரில் பீடித் தொழிலாளர்கள் பேரணி

3 அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி அனைத்து தொழிற்சங்க பீடித் தொழிலாளர்கள் நேற்று வேலூரில் பிரம்மாண்ட பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர் சைதாப்பேட்டை முரு கன் கோயிலில் இருந்து ஆட்சியர் அலுவலகம் நோக்கி அனைத்து தொழிற்சங்க பீடித் தொழிலாளர் கள் நேற்று காலை பேரணியாகச் சென்றனர். பின்னர், ஆட்சியர் அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பீடித் தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.

பீடிக் கட்டுகள் மீது 85 சதவீதம் அளவுக்கு அபாய சின்னங்கள் அச்சிட வேண்டும். பீடி கட்டுகள் மீது காலாவதி தேதி அச்சிட்டு 2 மாதத்துக்கு மேல் விற்பனை செய்யக்கூடாது. கடையில் சில்லறையில் பீடி விற்பனை செய்யக்கூடாது என்று 3 அம்ச சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி பேரணி, போராட்டம் நடந்தது.

இதற்கு, சிஐடியு தமிழ்நாடு பீடித் தொழிலாளர் சம்மேளனத் தலைவர் எம்.பி.ராமச்சந்திரன், ஏஐடியுசி பீடி கட்டு புகையிலை தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் சி.ஜி.ராஜாராம், ஐஎன்டியுசி மாநில தேசிய பீடி தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் என்.கிருஷ்ணன், எல்பிஎப் வேலூர் மாவட்ட பீடி தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்டச் செயலாளர் சு.கோபால், ஏடிபி அண்ணா பீடி தொழிலாளர் சங்க செயலாளர் தட்சிணா மூர்த்தி, எஸ்டியு பீடி தொழி லாளர் சங்கச் செயலாளர் என்.பி.வாஹித் ஆகியோர் தலைமை தாங்கினர்.

போராட்டம் குறித்து சிஐடியு பீடித் தொழிலாளர் சம்மேளனத் தலைவர் எம்.பி.ராமச்சந்திரன் கூறும்போது, ‘‘தமிழ்நாட்டில் ஒரு கோடி தொழிலாளர்கள் பீடித் தொழிலை நம்பி உள்ளனர். மத்திய அரசு 3 முக்கிய சட்டங்களை நிறைவேற்றி பீடி தொழிலை நசுக்கப் பார்க்கிறது. குடிசைத் தொழிலான பீடி உற்பத்தியை அழிக்க முயற்சிக்கிறது. மத்திய அரசை கண்டித்து விரைவில் நாடு தழுவிய அளவில் 3 கோடி பீடி தொழிலாளர்களை திரட்டிப் போராட்டம் நடத்த உள்ளோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x