Published : 12 Apr 2014 10:00 AM
Last Updated : 12 Apr 2014 10:00 AM

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.நடராஜன் காலமானார்

உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.நடராஜன் (89) சென்னையில் வெள்ளிக்கிழமை காலமானார். கடந்த 1924-ம் ஆண்டு சேலத்தில் பிறந்த எஸ்.நடராஜன், சேலத்தில் பள்ளி படிப்பையும், சென்னை லயோலா கல்லூரியில் கல்லூரி படிப்பையும் முடித்தார். சென்னை அரசு சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்ற அவர், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞராக 1947-ம் ஆண்டு பதிவு செய்து கொண்டார்.

சிவில், கிரிமினல், வரி விதிப்பு, தொழிற்சாலைகள் மற்றும் தொழிலாளர்கள் சட்டம் என சட்டத்தில் பன்முகப் புலமைப் பெற்றுத் திகழ்ந்த நடராஜன், 1965-ம் ஆண்டு மாவட்ட நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார். 1973-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட நடராஜன், பின்னர் 1986-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 1989-ம் ஆண்டு நீதிபதி பதவியிலிருந்து அவர் ஓய்வு பெற்றார்.

அவருக்கு சென்னையில் வசிக்கும் ஆடிட்டர் ரமேஷ் ராஜன், அமெரிக்காவில் வசிக்கும் பேராசிரியர் மகேஷ் ராஜன், சுரேஷ் ராஜன் ஆகிய 3 மகன்கள் உள்ளனர். நீதிபதி நடராஜனின் உடல் சென்னை கிழக்கு அபிராமபுரம் இரண்டாவது தெருவில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பெசன்ட் நகர் மின் மயானத்தில் சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு உடல் தகனம் நடைபெறுகிறது.

தொடர்புக்கு: 044 2499 5056.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x