Published : 05 Apr 2014 11:50 AM
Last Updated : 05 Apr 2014 11:50 AM

பாஜக கூட்டணி வேட்பாளர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு தேவை: டிஜிபி, தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு

பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் மற்றும் டிஜிபி ராமானுஜத்திடம் வெள்ளிக்கிழமை புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்த ராஜேந்திரன் மற்றும் வானதி சீனிவாசன் (பாஜக), பாலாஜி (தேமுதிக), முத்துக்குமார் (பாமக), தேவதாஸ் (மதிமுக) ஆகியோர், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் ஒரு புகார்மனுவினை அளித்தனர். அந்த புகாரில் கூறப்பட்டிருப்பதாவது:

தர்மபுரியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பா.ம.க. வேட்பாளர் அன்புமணி ராமதாஸின் பிரச்சார வேன் மீது சிலர் கல்வீசி தாக்கி உள்ளனர். இதில் வேனின் கண்ணாடி உடைந்து ஓட்டுநருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அன்புமணி நூலிழையில் தப்பியுள்ளார். இதேபோல், ஆரணியில் கடந்த வாரம் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி மீதும் ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் குறிவைத்து தாக்கப்படுகின்றனர். இந்த செயல்களில் ஈடுபட்ட வன்முறை கும்பலை கண்டுபிடித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு பிரச்சாரத்தின்போது கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். நுண்ணறிவு பிரிவு காவல் துறையை பயன்படுத்தி, தேர்தல் பிரச்சாரத்தில் வன்முறை சம்பவங்களை தடுக்க முன் கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. பின்னர் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக டிஜிபி ராமானுஜத்திடமும் அவர்கள் மனு அளித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x