Last Updated : 08 Apr, 2014 09:20 AM

 

Published : 08 Apr 2014 09:20 AM
Last Updated : 08 Apr 2014 09:20 AM

சென்னை பறக்கும் சாலைத் திட்டம்: உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை துறைமுகம்- மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் குறித்து பதில் அளிக்குமாறு தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சென்னை துறைமுக கழகத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்தது.

மதுரவாயல்- துறைமுகம் இடையே கூவம் ஆறு வழியாக 19 கி.மீட்டர் தொலைவுக்கு பறக்கும் சாலை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கு தடை விதிக்கக் கோரி தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு தலைமை நீதிபதி பி.சதாசிவம், நீதிபதி ரஞ்சன் கோகோய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் மூத்த வழக்கறிஞர் டி.ஆர்.அந்திஅர்ஜுனா, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பி.வில்சன் ஆகியோர் ஆஜராகினர். தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவிவேதி, கூடுதல் அட்வகேட் சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் ஆஜராகினர்.

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாதம்

தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் ஆஜரான அந்திஅர்ஜுனா கூறியதாவது: இத்திட்டத்துக்கு ஏற்கெனவே ரூ.650 கோடி செலவிடப்பட்டுள்ளது. திட்டத்தை தாமதப்படுத்தி கொண்டே சென்றால் செலவு கணிசமாக அதிகரிக்கும்.

கூவம் ஆற்றில் தூண்கள் அமைப்பதால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்று தமிழக அரசு கூறுவது தவறான கருத்து என்று தெரிவித்தார்.

மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பி.வில்சன் வாதிட்டபோது, தூண்கள் அமைப்பதால் நீரோட்டத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நிரூபித்துள்ளோம், இத்திட்டம் கடந்த திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதால் தமிழக அரசு உள்நோக்கத்துடன் தடை விதிக்க முயற்சிக்கிறது என்றார்.

தமிழக அரசு கருத்து

தமிழக அரசின் சார்பில் ஆஜரான ராகேஷ் திவிவேதி கூறியதாவது:

கூவம் ஆற்றின் கரையோரம்தான் தூண் கள் அமைக்க அரசாணையில் அனுமதி வழங்கப் பட்டுள்ளது. அதற்கு மாறாக ஆற்றின் நடுவே தூண்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. இதனால் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது என்று வாதிட்டார்.

தலைமை நீதிபதி கருத்து

அப்போது தலைமை நீதிபதி பி. சதாசிவம் கூறியதாவது:

மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது மாநில அரசின் கடமை. கூவம் ஆற்றில் தூண்கள் எழுப்பி மேம்பால சாலை அமைப்பதால் வெள்ளப் பெருக்கு அபாயம் ஏற்படும் என்று மாநில அரசு கூறுகிறது. அந்தக் கருத்தை ஒதுக்கி தள்ள முடியாது. இதுதொடர்பாக நிபுணர்கள் குழுவின் கருத்தை கேட்டறிந்து முடிவு செய்யலாம் என்றார்.

பறக்கும் சாலைத் திட்டத்துக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதிகள், இதுதொடர்பாக ஆய்வு நடத்த தகுதியான நிபுணர்கள் குழுவை 4 வாரங் களுக்குள் பரிந்துரைக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

மேலும் தமிழக அரசின் மனு குறித்து பதில் அளிக்குமாறு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் சென்னை துறைமுக கழகத்துக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x