Published : 09 Feb 2015 11:41 AM
Last Updated : 09 Feb 2015 11:41 AM

வனக்கல்லூரி மாணவர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றுக: வைகோ

வனச்சரகர் பணியிடங்களில் வனவியல் பட்டதாரிகளுக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற வனக்கல்லூரி மாணவர்களின் நியாயமான கோரிக்கையை தமிழக அரசு ஏற்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் பயின்று வரும் மாணவர்கள், ஜனவரி 27-ம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாடு வனத்துறையில் உள்ள வனச்சரகர் பணியிடங்களுக்கு வனவியல் பட்டதாரிகளை நியமிக்கக்கோரி வனக்கல்லூரி மாணவர்கள் நீண்டகாலமாக போராடி வருகின்றனர்.

2009 ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின் விளைவாக தமிழக அரசு 2010, ஆகஸ்டு 20-ல், வனச்சரகர் பணியிடங்களில் வனவியல் பட்டதாரிகளுக்கு நூறு விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்று அரசாணை பிறப்பித்தது. இதன் மூலம் 74 வனவியல் பட்டதாரிகள் வனச்சரகர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ஆனால் அதிமுக அரசு 2014, ஜூலை 10-ல் திடீரென்று ஒரு அரசாணை வெளியிட்டு, வனச்சரகர் பணியிடங்களுக்கு வனவியல் பட்டதாரிகள் 25 விழுக்காடு மட்டுமே நியமனம் செய்யப்படுவர் என்று அறிவித்தது.

தமிழக அரசின் அரசாணையை திரும்ப பெறக் கோரியும், வனச்சரகர் பணியிடங்களில் தங்களுக்கு முன்னுரிமை அளிக்க வலியுறுத்தியும் வனக்கல்லூரி மாணவர்கள் 2014, ஜூலையில் இருந்து 105 நாட்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக வனத்துறை அமைச்சர் மிகவும் காலதாமதமாக வனக்கல்லூரி மாணவர்களை அழைத்துப்பேசி வனச்சரகர் பணியிடங்களில் இடஒதுக்கீடு குறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருவதால், தீர்ப்பு வந்த பிறகு மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார்.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம், 2014, ஆகஸ்டில் அளித்த தீர்ப்பில், வனச்சரகர் பணியிடங்களுக்கு, வனவியல் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

இதனால் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட 74 வனவியல் பட்டதாரிகள் வனச்சரகர் பயிற்சிக்கான பணி ஆணை வழங்கப்பட்டது. தற்போது இது தொடர்பாக தமிழக அரசு மீண்டும் 2014, டிசம்பர் 10-ல் அரசு ஆணை எண் 134-ஐ வெளியிட்டுள்ளது. இதில் வனச்சரகர் பணியிடங்களில் வனவியல் பட்டதாரிகளுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படாது என்று தெரிவித்து இருப்பதுடன், இதன்படியே வனத்துறையில் 187 பணியிடங்களுக்கு வனச்சரகர் தேர்வு செய்யப்பட இருப்பதாகவும் தமிழக அரசு அறிவிப்பு தந்துள்ளது.

தமிழக அரசின் இந்த அரசாணை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரானது மட்டுமின்றி, வனக்கல்லூரியில் பயிலும் மாணவர்களின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கி இருக்கிறது.

எனவே தமிழக அரசு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மாணவர்களை உடனே அழைத்துப் பேசி, உரிய முறையில் வனக்கல்லூரி மாணவர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x