Published : 17 Feb 2015 09:37 AM
Last Updated : 17 Feb 2015 09:37 AM

கிரானைட் முறைகேடு வழக்கில் குவாரி அதிபருக்கு நிபந்தனை ஜாமீன்: ரூ.4.38 கோடி டெபாசிட் செய்ய உத்தரவு

மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்ட மணல் குவாரி அதிபர் படிக்காசுவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் ரூ.4.38 கோடி டெபாசிட் செய்யவும், குற்றப் பிரிவு போலீஸில் தினமும் ஆஜராகி கையெழுத்திடவும் அவருக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது.

மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி உட்பட பல்வேறு இடங்களில் அரசுக்கு சொந்தமான இடங்களில் முறைகேடாக கிரானைட் கற்களை எடுத்து, பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியது தொடர்பாக மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் அண்மையில் வழக்கு பதிவு செய்தனர். இந்த முறைகேடு தொடர்பாக சிவகங்கையைச் சேர்ந்த மணல் குவாரி அதிபர் படிக்காசு, சோலைராஜன், நாகூர் ஹனீபா, சேதுராமன், மோகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் மோகன் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த வாரம் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில் படிக்காசு, சோலைராஜன், நாகூர் ஹனீபா, சேதுராமன் ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிபதி இளவழகன் முன் நேற்று விசாரணைக்கு வந்தன.

குற்றப் பிரிவு போலீஸ் தரப்பில் வாதிட்ட அரசு குற்றவியல் தலைமை வழக்கறிஞர் சண்முக வேலாயுதம், அரசு வழக்கறிஞர் குணசேகரன் ஆகியோர் படிக்காசு உள்ளிட்ட 4 பேருக்கும் ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்தனர். விசாரணைக்குப் பின் படிக்காசுவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

படிக்காசு முதலாவது நீதித் துறை நடுவர் மன்றத்தில் ரூ.2.38 கோடிக்கு வங்கி உத்தரவாத பத்திரம், ரூ.2 கோடி பணம் டெபாசிட் செய்ய வேண்டும். பின்னர் தினமும் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் முன் காலை, மாலையில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நீதிபதி நிபந்தனை விதித்தார்.

நாகூர் ஹனீபாவின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. சோலைராஜன் மீது இரு வழக்குகள் உள்ளன. அவருக்கு ஒரு வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்டது.

மற்றொரு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. சேதுராமனின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x