

சென்னை அரசு பொது மருத்துவமனையை சிறை தண்டனைக் கைதிகள் 31 பேர் சுத்தம் செய்தனர். புழல் சிறையில் 1,000-க்கும் மேற்பட்ட தண்டனைக் கைதிகள் உள்ளனர். ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை அன்று சிறைத்துறை அதிகாரிகள் தண்டனைக் கைதிகளை அழைத்துச் சென்று அரசு அலுவலகங்கள், அரசு பள்ளிகள் மற்றும் அரசு மருத்துவமனைகளை சுத்தம் செய்கின்றனர்.
அதன்படி, சிறைத்துறை துணைத் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் 31 தண்டனைக் கைதிகளை சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு நேற்று காலை 9 மணிக்கு போலீசார் அழைத்து வந்தனர். பாதுகாப்புக்காக 20-க்கும் மேற்பட்ட போலீஸார் வந்திருந்தனர்.
மருத்துவமனையில் பழைய கட்டிடத்தில் இருந்த குப்பைகள் மற்றும் கழிவுகளை அகற்றி கைதிகள் சுத்தம் செய்தனர். தூய்மைப்படுத்தும் பணி 11 மணிக்கு முடிந்தது. இதையடுத்து, கைதிகளை வாகனத்தில் ஏற்றி புழல் சிறைக்கு கொண்டு சென்றனர். தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்ட கைதிகளை பார்க்க பொதுமக்கள் திரண்டதால் மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.