Published : 26 Feb 2015 10:05 AM
Last Updated : 26 Feb 2015 10:05 AM

மேற்படிப்புக்கு விண்ணப்பிக்க 10, பிளஸ் 2 மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்று: அரசு தேர்வுத் துறை முடிவு

எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 மாணவர்கள் மேற்படிப்புக்கு உடனடியாக விண்ணப்பிக்கும் வகையில் அவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்க அரசு தேர்வுத்துறை முடிவெடுத்துள்ளது

எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளை சிறப்பாக நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பள்ளிக்கல்வி அமைச்சர் கே.சி.வீரமணி தலைமை தாங்கினார். பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் டி.சபீதா முன்னிலை வகித்தார்.

பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன், அரசு தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் உள்ளிட்ட இயக்குநர்கள், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர். காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டம் மாலை 6 மணிக்கு மேல் நீடித்தது. கூட்டத்துக்கு இடையே முதன்மை செயலர் சபீதா நிருபர்களிடம் கூறியதாவது:-

பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் வெளியாகி, மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் கிடைக்க 10 நாட்களுக்கு மேல் ஆகிவிடுகிறது. அவர்கள் மேற்படிப்புக்கு உடனடியாக விண்ணப்பிக்கும் வகையில் இந்த ஆண்டு அவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் (புரவிஷனல் சர்டிபிகேட்) வழங்கப்படும். இதில் அவர்களின் புகைப்படம், பதிவு எண், மதிப்பெண் விவரம் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருக்கும். இந்த தற்காலிக சான்றிதழ் 90 நாட்களுக்கு செல்லுபடியாகும். வழக்கம்போல் நிரந்தர மதிப்பெண் சான்றிதழும் வழங்கப்படும்.

அதேபோல், மாணவர்கள் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு செய்வதற்காக விடைத்தாள் நகல் வேண்டி விண்ணப்பிக்கும்போது நகல் எடுத்து வழங்க தாமதமாகிவிடுகிறது. இதை தவிர்க்கும் வகையில் விடைத்தாள்களை ஸ்கேன் செய்து வெகுவிரைவாக வழங்க உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x