

தமிழ்நாடு அனைத்துத் துறை அரசுப் பணியாளர் சங்கங் களின் கூட்டமைப்பின் மாநில நிர்வாகிகள் கூட்டம், அமைப்பாளர் பால்பாண்டியன் தலைமையில் நேற்று தஞ்சையில் நடைபெற்றது.
கூட்டத்துக்குப் பின்னர், அகில இந்திய அரசுப் பணியாளர் மகா சம்மேளனத்தின் பொதுச் செயலர் கு.பாலசுப்பிரமணியன் அளித்த பேட்டி: அரசு ஊழியர்களின் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கடந்த 21-ம் தேதி அரசு ஊழியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினர்.
ஆனாலும், அரசு தரப்பில் பேச்சுவார்த்தைக்கு முன் வரவில் லை. இதனால், அடுத்த கட்டமாக மார்ச் 21-ல், 8 மண்டலங்களில் பேரணி நடைபெறும். இதேபோல, தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்துடன் இணைந்த சாலைப் பணியாளர் சங்கம் சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்ச் 4, 5-ம் தேதிகளில் சென்னையில் கருப்புச் சட்டை அணிந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளோம்.
தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல கட்ட போராட்டமும், அரசுத் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தியும், இதுவரை எந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை.
எனவே, வரும் 4-ம் தேதி தமிழகம் முழுவதும் கூட்டுறவுத் துறை நியாய விலைக்கடை பணியாளர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட உள்ளனர் என்று தெரிவித்தார்.