Published : 23 Feb 2015 10:39 AM
Last Updated : 23 Feb 2015 10:39 AM

தருண் விஜய் முயற்சியில் திருவள்ளுவருக்காக மாணவர், இளைஞர்கள் இயக்கம்: மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தொடங்கி வைத்தார்

‘திருவள்ளுவருக்காக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள்’ என்னும் இயக்கத்தை பாஜக எம்பி தருண் விஜய் தொடங்கியுள்ளார். இதனை மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி டெல்லியில் நேற்று முன் தினம் தொடங்கி வைத்தார்.

உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்பி தருண் விஜய் தமிழ் மொழிக்காக நாடாளு மன்றத்தில் குரல் கொடுத்ததன் மூலம் பிரபலமானவர். சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற நடைமுறைகளில் தமிழ் மொழியை பின்பற்ற வேண்டும், தமிழுக்கு தேசிய அளவில் அங்கீகாரம் வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தார். தருண் விஜய்யின் பணிகளை பாராட்டும் வகையில் கவிஞர் வைரமுத்து சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் பாராட்டு விழா ஒன்றை நடத்தினார்.

இந்நிலையில் திருவள்ளுவர் மற்றும் திருக்குறளின் புகழை நாடு முழுவதும் பரப்பும் முயற்சியில் தருண் விஜய் ஈடுபட்டுள்ளார். இதற்காக தனி இயக்கத்தையும் அவர் தொடங்கியுள்ளார். இது தொடர்பாக அவர் ‘தி இந்து’விடம் கூறியுள்ளதாவது:

திருவள்ளுவரின் புகழை நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக ‘திருவள்ளுவருக்காக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள்’ இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தில் ஒரு கோடி மாணவர்களை சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இயக்கத்துக்கு குடியரசுத் தலைவர் வரவேற்பளித்துள்ளார். அரசியல் சாயங்களை கடந்து தேச ஒற்றுமைக்காக இந்த முயற்சியை சிறப்பாக செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த இயக்கத்தை மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி டெல்லி சாஸ்திரி பவனில் கடந்த 20-ம் தேதி தொடங்கி வைத்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x