Published : 06 Feb 2015 10:32 AM
Last Updated : 06 Feb 2015 10:32 AM

கிருஷ்ணகிரி கோயிலில் உண்டியலை உடைத்து துணிகர கொள்ளை

கிருஷ்ணகிரி அருகே கோயிலில் புகுந்த மர்ம நபர்கள் கண்காணிப்பு கேமராக்களை உடைத்துவிட்டு உண்டியல் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ளது ஆவல்நத்தம் கிராமம். இந்த கிராமத்தின் அருகே ஓசூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில், அறநிலையத்துறைக்குச் சொந்தமான பசுவேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய நாட்களில் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள்.

இங்குள்ள தீர்த்தத்தில் திங்கட்கிழமைகளில் நீராடினால் பாவங்கள் தீரும் என்பது ஐதீகம். மேலும், இக்கோயிலின் அருகே முருகன் கோயிலும் உள்ளது. இவ்வாறு பிரசித்தி பெற்ற இக்கோயிலில் வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு பூசாரிகள் பூஜையை முடித்துவிட்டு பூட்டிச் சென்றனர்.

நேற்று காலை கோயிலுக்கு வந்த பூசாரிகள் கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியைடந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது 4 உண்டியல்களில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. குருபரப்பள்ளி போலீஸார், மோப்ப நாய் உதவியுடன் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர்.

இக்கோயிலில் ஏற்கெனவே 4 முறை திருட்டுச் சம்பவங்கள் நடந்ததால், கண்காணிப்பு கேம ராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. அதனை மர்ம நபர்கள் உடைத்து விட்டு, சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் சிப்பை எடுத்து விட்டு கொள்ளையடித்திருப்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், கடந்த மாதம் இதே பகுதியில் தான் தேசிய வங்கியில் 48 கிலோ தங்கம் கொள்ளை போனது. அச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் இதுவரை சிக்காத நிலையில் அதே காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மற்றொரு கொள்ளை சம்பவம் நடந்திருப்பது போலீஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x