Published : 02 Apr 2014 11:52 AM
Last Updated : 02 Apr 2014 11:52 AM
சென்னை அருகே உள்ள புழல் மத்திய சிறையில் சிறைக் கைதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சிறைக் கைதிகள் உரிமை அமைப்பின் இயக்கு நர் வழக்கறிஞர் பி.புகழேந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
குண்டர்கள் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்ட ஏராளமான கைதிகள் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தங்களுக்கு எதிரான கைது நடவடிக்கைகளை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் அவர்கள் ஆட்கொணர்வு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுக்கள் விசாரணைக்கு வராமல் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆகவே தங்கள் மனுக்கள் மீது விரைவாக விசாரணை நடத்தக் கோரி 500-க்கும் மேற்பட்ட கைதிகள் கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதி புழல் சிறையில் உண்ணாவிரதம் இருந்துள்ளனர். அப்போது கைதிகள் மீது சிறைக் காவலர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் 20-க்கும் மேற்பட்ட கைதிகள் படுகாயம் அடைந்தனர். 100-க்கும் மேற்பட்ட கைதிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டதா என்பது பற்றி தெரியவில்லை.
தங்கள் கோரிக்கை தொடர்பாக உயர் நீதிமன்ற தலைமை பதிவாளருக்கு கோரிக்கை மனுக்களை அனுப்ப வேண்டும் என்பது போன்ற தகுந்த ஆலோசனைகளை உண்ணாவிரதம் மேற்கொண்ட கைதிகளுக்கு வழங்குவதற்குப் பதிலாக அந்தக் கைதிகள் மீது தாக்குதல் நடத்தியிருப்பது ஏற்புடையது அல்ல. ஆகவே கைதிகள் மீதான தாக்குதல் சம்பவம் குறித்து நீதி விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். மேலும் தாக்குதலுக்குப் பொறுப்பான சிறை அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் புகழேந்தி கூறியுள்ளார்.
இந்த மனு தற்காலிக தலைமை நீதிபதி சதீஷ் கே.அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனு தொடர்பாக தமிழக அரசு 2 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT