Published : 08 Jan 2015 10:20 AM
Last Updated : 08 Jan 2015 10:20 AM

சென்னை - பழநி ரயில் பொள்ளாச்சி வரை நீடிப்பு

தென்னக ரயில்வே பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ரா நேற்று காலை சேலம் ரயில்வே கோட்டத்தில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நாட்டில் மிக தூய்மையான ரயில்வே நிலையங்களில் சேலம், ஈரோடு, கோவை ரயில் நிலையங்கள் உள்ளன. மக்களின் ஒத்துழைப்பே இதற்கு காரணம். சென்னை மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து கேரளாவுக்கு செல்லும் பயணிகளின் கோரிக்கையை ஏற்று, கோவை ஜங்ஷன் வழியாக ரயில்கள் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பழநி - பொள்ளாச்சி அகல ரயில்பாதை பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் வரும் 9-ம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. சென்னையில் இருந்து பழநி வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பொள்ளாச்சி வரை நீடிக்கப்படும்.

மேலும், மதுரை - பழநி, திருச்செந்தூர் - பழநி ரயில்களை பொள்ளாச்சி வரை நீடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சேலத்தில் இருந்து திருச்சிக்கு ரயில் இயக்க நாடாளுமன்ற நிலைக்குழு முடிவு செய்யும். மேட்டூர் வழித்தடத்தில் தண்டவாள பராமரிப்புப் பணி முடிக்கப்பட்டு, ரயில் இயக்கப்படும். ஊட்டி மலையில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்படுவதால் தண்டவாளத்தில் பாறைகள் விழுவதால் ரயில் போக்குரவத்து தடை செய்யப்படுகிறது. ஊட்டி மலைப்பாதையில் ரயில் வழி தடத்தில் நிலச்சரிவு ஏற்படும் இடங்கள் குறித்து ஆய்வு மேற் கொண்டு, மண், பாறை சரிவுகளை தடுப்பதற்கான ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x