Published : 04 Jan 2015 11:41 AM
Last Updated : 04 Jan 2015 11:41 AM

மீத்தேன் திட்டத்தை எதிர்த்து மாணவர்கள் தொடர் உண்ணாவிரதம்: ஒப்பந்தத்தை முழுமையாக கைவிட வலியுறுத்தல்

மீத்தேன் திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தமிழக அரசு புதுப்பிக்கக் கூடாது, இத்திட்டத்தை மத்திய அரசு முழுமையாக கைவிட வேண்டும் என வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் தமிழ்நாடு மாணவர் இயக்கத்தினர் 6 பேர் நேற்று 3-வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவிரி டெல்டா பகுதியான தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் மீத்தேன் எரிவாயு எடுப்பதற்காக கிரேட் ஈஸ்டன் எனர்ஜி கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் தமிழக அரசு செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்றுடன் (ஜன.4) முடிவடைகிறது.

காவிரி டெல்டா விவசாயத்தை கடுமையாகப் பாதிக்கும் இத்திட்டத்துக்கான ஒப்பந்தத்தை புதுப்பிக்கக் கூடாது. இதற்காக மத்திய அரசு அளித்துள்ள அனைத்து அனுமதிகளையும் ரத்து செய்ய தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மத்திய அரசு இந்த திட்டத்தை முழுமையாகக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாணவர் இயக்க மாநிலச் செயலர் எழிலன் தலைமையில் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் இரணியன், சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் ராஜ்குமார், தமிழ்நாடு மாணவர் இயக்கத்தைச் சேர்ந்த ஜீவபாரதி, முத்துகிருஷ்ணன், கிருஷ்ணகுமார் ஆகிய 6 பேர் கும்பகோணம் செட்டி மண்டபத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் கடந்த 3 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் 5 பேருக்கு நேற்று உடல் நலம் பாதிக்கப்பட்டது. எனினும், தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x