Last Updated : 07 Jan, 2015 09:34 AM

 

Published : 07 Jan 2015 09:34 AM
Last Updated : 07 Jan 2015 09:34 AM

அசாமில் தேசிய இளைஞர் திருவிழா: போட்டிகளில் பங்கேற்க முடியாமல் தவிக்கும் 60 தமிழக மாணவர்கள்

தமிழக விளையாட்டுத் துறையின் அலட்சியத்தால், அசாமில் நாளை தொடங்கவுள்ள தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை 60 தமிழக மாணவர்கள் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அசாம் மாநிலம் கவுகாத்தியில் நாளை முதல் 12-ம் தேதி வரை தேசிய இளைஞர் திருவிழா (போட்டி) நடைபெறுகிறது. மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் சார்பில் நடக்கும் இந்நிகழ்ச்சியில் நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் கலைக் குழுக் களைச் சேர்ந்த 3 ஆயிரம் மாணவ-மாணவியர் பங்கேற்கின்றனர்.

கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம் மற்றும் ஒலிம்பிக்கில் மல்யுத்தப் போட்டியில் பதக்கம் வென்ற சுஷில்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.

இதில் பரதநாட்டியம், வாய்ப்பாட்டு உள்ளிட்ட கர்நாடக இசை, கிராமிய இசை, மேற்கத்திய இசை, இந்துஸ்தானி, தனிவாத்தியம், குழு நடனம், தப்பாட்டம் உள்ளிட்ட நாட்டுப்புறக் கலைகள் தொடர்பான போட்டிகள் நடைபெறுகின்றன.

இந்தியாவில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களும் கலந்து கொள்கின்றனர். இப்போட்டிகளில் பங்கேற்க அந்தந்த மாநிலங்களின் விளையாட்டுத் துறை சார்பில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

தமிழத்தில் திருச்சியில் கடந்த டிசம்பர் 21-ம் தேதி நடந்த தகுதிப் போட்டியில் 60 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் முன்பதிவு செய் திருந்த ரயில் டிக்கெட் உறுதி ஆகாததால் உங்களை போட்டிக்கு அழைத்துச் செல்ல முடியாது என ஆணையம் கைவிரித்து விட்டது. இதனால் மாணவர்கள் செய்வதறி யாது அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

இது குறித்து போட்டிக்கு மாணவர்களை அழைத்துச் செல்லவிருந்த ஒரு கல்லூரி பேராசிரியர் கூறும்போது, ‘‘விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தினர் கடைசி நேரத்தில் மாணவர்களை தொலைபேசியில் அழைத்து, டிக்கெட் உறுதி செய்யப்படாததால், அசாமுக்கு அழைத்துச் செல்ல முடியாது எனக் கூறியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது’’ என்றார்.

அசாமில் நடக்கும் போட்டிக்குத் தேர்வான மாணவி கூறுகையில், “இதில் வெற்றி பெற கடுமையாகப் பயிற்சி எடுத்து வந்தோம். விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அலட்சியம் காரணமாக எங்களது முயற்சி வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற வாய்ப்பு மீண்டும் கிடைப்பதரிது. தமிழக அரசு உடனே தலையிட்டு தேசிய போட்டியில் நாங்கள் பங்கேற்க ஏற்பாடு செய்ய வேண்டும்” என்றார்.

ஒரு மாணவியின் தந்தை கூறுகையில், “டிக்கெட் இல்லாததால் போட்டிக்கு அழைத்துச் செல்லவில்லை என்றதும் எனது மகள் மிகவும் மனவருத்தத்தில் உள்ளார். சிலர் சொந்த செலவில் விமானத்தில் செல்ல விரும்புகின்றனர். ஆனால், விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தினர் ஒத்துழைப்பு தரத் தயங்குகின்றனர்,” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x