Published : 30 Jan 2015 09:35 AM
Last Updated : 30 Jan 2015 09:35 AM

முதல்வர் பன்னீர்செல்வத்தின் சகோதரருக்கு எதிராக வழக்கு: டிஜிபி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் டி.கள்ளிப்பட்டி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த என்.சுப்புராஜ், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

என் மூத்த மகன் நாகமுத்து, கைலாசப்பட்டி கைலாசநாதர் கோயி லில் பூசாரியாக பணிபுரிந்தார். கோயில் அறங்காவலர்கள் என் மகனை ஜாதி பெயரைச் சொல்லி தாக்கி, கோயிலில் இருந்து வெளியேற்றினர். இது தொடர்பாக தென்கரை காவல் நிலையத்தில் நாகமுத்து புகார் செய்தார்.

அந்தப் புகாரை திரும்ப பெறும்படி நாகமுத்துவை தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரரும், பெரியகுளம் நகராட்சித் தலைவருமான ஓ.ராஜா மிரட்டினார். பெரியகுளம் டிஎஸ்பியும் புகாரை திரும்ப பெறுமாறு நாகமுத்துவை மிரட்டினார். இதனால் மன உளைச்சல் அடைந்த நாகமுத்து, 7.12.2012 அன்று தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்வதற்கு முன், தனது மரணத்துக்கு ஓ.ராஜா, மணிமாறன், பாண்டி, சிவகுமார், ஞானம், லோகு, சரணவன் ஆகியோர்தான் காரணம் என நாகமுத்து கடிதம் எழுதி வைத்துள்ளார்.

இதையடுத்து, நாகமுத்துவை தற்கொலைக்கு தூண்டியதாக ஓ.ராஜா உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் ராஜா உள்ளிட்டோர் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றனர். இந்நிலையில் ஓ.ராஜாவுக்கு எதிரான வழக்கை முடிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர். ஓ.ராஜாவும், சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்களும் அரசியல் செல்வாக்குமிக்கவர்கள். எனவே, இந்த வழக்கை தென்கரை போலீஸார் விசாரித்தால் நியாயம் கிடைக்காது. எனவே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஓ.ராஜா உள்ளிட்ட 7 பேர் தனியாக மனு தாக்கல் செய்துள்ளனர். இவ்விரு மனுக்களும் நீதிபதி எம்.சத்திய நாராயணா முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

விசாரணைக்குப் பின், சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய மனுவுக்கு பதிலளிக்க தமிழக காவல் துறை இயக்குநர், பெரியகுளம் துணை காவல் கண்காணிப்பாளர், தென்கரை காவல் நிலைய ஆய் வாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x