

கோப்புப் படம்
சென்னை: பெங்களூருவில் நேற்றுமுன்தினம் இரவு கனமழை காரணமாக, வான்வழிப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. பெங்களூரு விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய சுமார் 30 விமானங்கள் சென்னைக்குத் திருப்பி விடப்பட்டதால் பயணிகள் தவித்தனர்.
பெங்களூரு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்றுமுன்தினம் இரவு இடி, மின்னலுடன் கூடிய கனமழை கொட்டியது. சூறாவளி காற்று பலமாக வீசியதால் விமானங்களை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டது.
பெங்களூரு விமான நிலையத்துக்கு வந்த உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் பல மணி நேரமாக வானிலேயே வட்டமடித்தன. எரிபொருள் பற்றாக்குறை மற்றும் பாதுகாப்பு கருதி, அவை சென்னை, ஐதராபாத், கோவை மற்றும் திருச்சி ஆகிய நகரங்களுக்குத் திருப்பி விடப்பட்டன.
அதன்படி, அபுதாபி, பாங்காக், மலேசியா போன்ற சர்வதேச நகரங்களில் இருந்தும், டெல்லி, மும்பை, ஜெய்ப்பூர், கொல்கத்தா, புவனேஸ்வர், அகமதாபாத், பாட்னா, அமிர்தசரஸ், நகர், ஐதராபாத் போன்ற உள்நாட்டு நகரங்களில் இருந்தும் வந்த 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் சென்னை விமான நிலையத்தில் ஒன்றன்பின் ஒன்றாகத் தரையிறக்கப்பட்டன.
நள்ளிரவு நேரம் என்பதால் பயணிகள் அனைவரும் விமானத்திலேயே அமர வைக்கப்பட்டனர். அவர்களுக்குத் தேவையான குடிநீர் மற்றும் சிற்றுண்டிகளை அந்தந்த விமான நிறுவனங்கள் வழங்கின.
நள்ளிரவுக்குப் பிறகு பெங்களூருவில் வானிலை சீரானதை அடுத்து, சென்னையில் காத்திருந்த 30 விமானங்களும் மீண்டும் ஒன்றன்பின் ஒன்றாகப் பெங்களூரு நோக்கிப் புறப்பட்டுச் சென்றன. இதனால், சென்னை விமான நிலையத்தில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு பரபரப்பு ஏற்பட்டது.