

விழுப்புரம்: விழுப்புரம் அருகே நெடுஞ்சாலையில் உள்ள தடுப்பு கட்டை மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
மதுரை மாவட்டம் பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (63), இவரது மனைவி செல்வி (55), மகன் பிரவீன் (30), இவர்களது உறவினர் கவிதா (48). இவர்கள் நான்கு பேரும் விழுப்புரம் மாவட்டம் வழியாக, மதுரையில் இருந்து சென்னைக்கு சுப நிகழ்ச்சிக்காக காரில் இன்று (ஜுன் 28) காலை சென்றனர். காரை பாண்டியன் (40) ஓட்டி சென்றார்.
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், விழுப்புரம் அடுத்த பிடாகம் என்ற இடத்தில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து ஓடிய கார், மேம்பாலம் - சர்வீஸ் சாலைக்கு இடையே இருந்த தடுப்பு கட்டை மீது மோதியது. இந்த விபத்தில் செல்வம், கவிதா, ஓட்டுநர் பாண்டியன் ஆகியோர் உயிரிழந்தனர்.
விழுப்புரம் தாலுகா போலீஸார், போக்குவரத்து போலீஸார், நெடுஞ்சாலை மீட்பு குழுவினர் ஆகியோர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். படுகாயமடைந்த தாய் செல்வி, மகன் பிரவீன் ஆகியோர் மீட்கப்பட்டு, முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் செல்வி, சிகிச்சை பெற்று வருகிறார். மீட்பு வாகனம் மூலம் விபத்தில் சிக்கிய கார் அப்புறப்படுத்தப்பட்டன.
விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மீட்பு நடவடிக்கை துரிதமாக மேற்கொள்ளப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை.