

வேலூர் மாநகராட்சி துணை மேயர் தேர்தலில் அதிமுக வேட்பாளர் சொக்கலிங்கம், 2 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
வேலூர் மாநகராட்சியில் காலியாக இருந்த துணை மேயர் பதவிக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. தேர்தல் நடத்தும் அலுவலரும் ஆணையருமான ஜானகி ரவீந்திரன், தேர்தலை நடத்தினார்.
அதிமுக வேட்பாளராக சொக்கலிங்கம், திமுக வேட்பாளராக ராஜா ஆகியோர் போட்டியிட்டனர். மொத்தமுள்ள 60 கவுன்சிலர்களில், மதிமுகவைச் சேர்ந்த இருவர் தாமதமாக வந்ததால் வாக்களிக்க அனுமதிக்கவில்லை. இதையடுத்து, 58 கவுன்சிலர்கள் மற்றும் மேயருக்கு ஒரு வாக்கு என மொத்தம் 59 வாக்குகள் பதிவாகின.
முடிவில், 30 வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளர் சொக்கலிங்கம் வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் ராஜா 28 வாக்குகள் பெற்றார். ஒரு செல்லாத வாக்கும் பதிவாகியிருந்தது.
ராணிப்பேட்டை நகராட்சி
ராணிப்பேட்டை நகராட்சி துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் அதிமுக சார்பில் ஷாபுதீன், திமுக சார்பில் தாமோதரன் ஆகியோர் போட்டியிட்டனர். முடிவில், ஷாபுதீன் 17 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தாமோதரன் 13 வாக்குகள் பெற்றார். ஒரு வாக்கு செல்லாததாயிற்று.
திருச்சி மாநகராட்சி துணை மேயர் சீனிவாசன்
திருச்சி மாநகராட்சி துணை மேயராக அதிமுகவைச் சேர்ந்த சீனிவாசன் போட்டியின்றி நேற்று தேர்வு செய்யப்பட்டார்.
முன்பு துணை மேயராக இருந்த ஆசிக் மீரா, கட்சி மேலிடத்தின் உத்தரவின்பேரில் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.
இந்நிலையில் அதிமுக சார்பில் அரியமங்கலம் கோட்டத் தலைவர் சீனிவாசன் திருச்சி மாநகராட்சி துணை மேயர் பதவிக்கு போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
அதிமுக வேட்பாளர் சீனி வாசனை தவிர வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் சீனிவாசன் போட்டியின்றி துணை மேயராக தேர்வு செய்யப்பட்டதாக மாநகராட்சி ஆணையர் ஜெயலட்சுமி அறிவித்தார்.