Last Updated : 13 Jan, 2015 10:23 AM

 

Published : 13 Jan 2015 10:23 AM
Last Updated : 13 Jan 2015 10:23 AM

டெங்கு பாதிப்பை தடுக்க உள்ளாட்சி சுகாதாரத் துறையை பொது சுகாதாரத் துறையுடன் இணைக்க ஆலோசனை

ராஜபாளையத்தில் நிகழ்ந்துள்ள டெங்கு பாதிப்பு மற்ற இடங்களில் நடக்காமல் தடுக்க உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப் பாட்டில் உள்ள சுகாதாரத்துறையை மீண்டும் தமிழக பொது சுகாதாரத் துறையுடன் (டிபிஎச்) இணைக்க வேண்டும் என்று டிபிஎச் முன்னாள் இயக்குநர் டாக்டர் எஸ்.இளங்கோ கூறியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத் தில் டெங்கு காய்ச்சலுக்கு குழந்தைகள் உட்பட 18 பேர் பலியாகியுள்ளனர். டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்துள்ளதால் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜய பாஸ்கர், செயலாளர் டாக்டர் ஜெ.ராதா கிருஷ்ணன் மற்றும் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் அனைவரும் ராஜபாளை யத்தில் முகாமிட்டு டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

ராஜபாளையத்தில் கொசு உற்பத் திக்கு காரணமாக தேங்கியுள்ள மழைநீர், குப்பைகளை அகற்றுவது, பொது மக்களிடம் டெங்கு காய்ச்சல் விழிப்பு ணர்வு ஏற்படுத்துவது போன்ற பணிகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை (டிபிஎச்) கட்டுப்பாட்டில் இருந்த சுகாதாரத்துறை உள்ளாட்சித் துறையில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிகளின் கட்டுப் பாட்டுக்கு சென்றதே டெங்கு காய்ச்சல் பரவியதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

இதுபற்றி பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை (டிபிஎச்) முன்னாள் இயக்கு நரும், தமிழ்நாடு பொது சுகாதார சங்கத்தின் தலைவருமான டாக்டர் எஸ்.இளங்கோ கூறியதாவது:

தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டத்தில் கடந்த 2000-ம் ஆண்டு திருத்தம் செய்யப் பட்டது. இதன்படி தமிழக பொது சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டில் இருந்த சுகாதாரத் துறையினர் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சி களின் கட்டுப்பாட்டுக்கு சென்றுவிட்டனர். அதன் பின் பொது சுகாதாரத்துறை தலைமை யால், அவர்களை கண்காணிக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ முடியவில்லை. அதனால் தமிழகத்தில் தாய்-சேய் நலம், தடுப்பூசி போன்ற பணிகள் சரியாக நடைபெறவில்லை.

அதேபோல மலேரியா, டெங்கு மற்றும் கொள்ளை நோய்கள் வராமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் தமிழகத்தில் சுகாதாரப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. ராஜபாளையம் நகராட்சி சுகாதாரப் பிரிவை சேர்ந்தவர்களின் மெத்தனப்போக்கே, உயிரிழப்புகள் ஏற்பட்டதற்கும் முக்கிய காரணம்.

அதனால் தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டத் தின் சட்டத் திருத்தத்தை திரும்ப பெற்று மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் கட்டுப்பாட்டில் உள்ள சுகாதாரப் பிரிவை சேர்ந்தவர்களை தமிழக பொது சுகாதாரத் துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x