Published : 30 Jan 2015 07:13 PM
Last Updated : 30 Jan 2015 07:13 PM
இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷிதா ராஜபக்ச நடத்தும் ஸ்போர்ட்ஸ் டிவி சானல் மீது இலங்கை அரசு கடுமையான வரியைச் சுமத்தியுள்ளது.
கார்ல்டன் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் என்ற ராஜபக்ச குடும்பத்தின் சானல் மீது சுமார் ரூ.47 கோடி வரி விதித்துள்ளது இலங்கை அரசு.
இந்த சானல் தொடங்கப்பட்ட நாளிலிருந்து அரசுக்கு ஒரு பைசா கூட வரி செலுத்தவில்லை என்று கூறிய இலங்கை நிதியமைச்சர் ரவி கருணநாயக. இந்த சானலுக்கு ராஜபக்ச பதவி காலத்தில் கிரிக்கெட் உட்பட பல விளையாட்டுகளுக்கான நேரடி ஒளிபரப்பு உரிமைகளை அரசு வழங்கியது என்றார்.
ராஜபக்ச குடும்பத்துக்குச் சொந்தமான இந்த சானல் தொடங்கப்படுவதற்கு முன்னால் அரசு தொலைக்காட்சியான ரூபவாகினிக்கே அனைத்து உரிமைகளும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தனது மகன் நடத்தும் சானலுக்கு முழு ஒளிபரப்பு உரிமைகளை வழங்கிய ராஜபக்ச, அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவை எடுத்தார். இதனால் டெண்டர்கள், போட்டி என்று எதுவுமின்றி கார்ல்டன் சானல் நடைபெற்று வந்தது. இதனால் இலங்கை அரசுக்கு கடும் இழப்பு ஏற்பட்டது என்று அரசு தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT