Published : 05 Jan 2015 11:03 AM
Last Updated : 05 Jan 2015 11:03 AM

சிதம்பரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்தனர்: நடராஜர் கோயிலில் தேரோட்டம் - உத்திரகோசமங்கையில் ஆருத்ரா தரிசனம்

சிதம்பரம் நடராஜர் கோயில் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவத்தை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடைபெற்றது. ஆயி ரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர்களை இழுத்தனர். இதேபோல் ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை யில் ஆருத்ரா தரிசனம் நடந்தது. மங்களநாதர் மரகத பச்சை நிறத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன உற்சவ விழா கடந்த மாதம் 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் 9-ம் நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. சித்சபையில் உள்ள மூலவர்களான ஸ்ரீநடராஜமூர்த்தி, ஸ்ரீசிவகாமசுந்தரி மற்றும் உற்சவர்கள் ஸ்ரீசுப்பிரமணியர், ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசண்டிகேஸ்வரர் ஆகியோர் தனித்தனி தேர்களில் அதிகாலை எழுந்தருளினர்.

பின்னர் கீழவீதி தேரடி நிலை யிலிருந்து தேர்கள் புறப்பட்டன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர்களை வடம் பிடித்து இழுத்தனர். தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதி வழியாக ஒன்றன்பின் ஒன்றாக வலம் வந்தன.

ஒவ்வொரு வீதியிலும் சிறப்பு தீபாராதணைகளும், கட்டளை தாரர்களின் சிறப்பு படையலும் நடைபெற்றது. மேலவீதியும் வடக்குவீதியும் இணையும் இடத்தில் ஸ்ரீநடராஜமூர்த்தி, ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாள் சுவாமி களுக்கு பருவதராஜகுல மரபினர் பட்டு சாத்தினர்.

தேர்களுக்கு முன்பாக ஓய்வு பெற்ற ஆசிரியர் பொன்னம் பலம் தலைமையில், சந்திர பாலசுப்பிரமணியன் முன்னிலை யில் ஓதுவார்கள் திருமுறை இன்னிசை ஆராதனை நிகழ்த்தி சென்றனர். மாலையில் அனைத்து தேர்களும் நிலையை வந்தடைந் தன.

பின்னர் ஸ்ரீநடராஜர், ஸ்ரீசிவகாமி அம்பாளும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு ஏக கால லட்சார்சணை நடைபெற்றது. இன்று (5ம் தேதி) அதிகாலை ராஜசபையில் ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளுக்கும், ஸ்ரீநடராஜ மூர்த்திக்கும் மகா அபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் ஆயிரங்கால் மண்டபத்தில் திருவாபரண அலங்காரமும், சித்சபையில் ரகசிய பூஜையும், அதைத்தொடர்ந்து பஞ்சமூர்த்தி வீதியுலாவும் நடைபெறுகிறது.

பிற்பகல் 2 மணிக்கு ஆயிரங் கால் மண்டபத்தில் ஸ்ரீநடராஜ மூர்த்தியும், ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளும் புறப்பட்டு நடனப்பந்த லில் நடனமாடி ஆருத்ரா தரிசன காட்சியளித்து சித்சபா பிரவேசம் செய்கின்றனர். விழாவையொட்டி 500க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

உத்திரகோசமங்கை

ராமநாதபுரம் மாவட்டம், உத்திரகோசமங்கை அருள்மிகு மங்களநாத சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஆருத்ரா தரிசனம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணியிலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது உத்திரகோசமங்கை. இங்கு பாண்டிய நாட்டின் 14 சிவஸ்தலங் கள் தோன்றுவதற்கு முன்னரே ஓர் இலந்தை மரத்தின் அடி யில் சுயம்புவாக மங்கள நாதன் தோன்றினார் என்பது புராண வரலாறு. அவருடன் உத்திரகோச மங்கையில் மங்களநாயகி அம்பாளும் அருள்பாலிக்கிறார்.

உத்திரகோசமங்கை மங்கள நாத சுவாமி கோயிலில் ஒரே கல்லினால் ஆன ஆறு அடி உயர பச்சை மரகத நடராஜர் சிலை உள்ளது. ஆண்டு முழுவதும் சந்தனம் பூசப்பட்டு காட்சியளிக்கும் இந்த சிலை யில், ஆண்டில் ஒருநாள் மட்டும் அதாவது ஆருத்ரா தினத்தில் மட்டும் சந்தனக் காப்பு களையப்பட்டு பச்சை மரகதத்துக்குரிய நிறத்துடன் காட்சியளிப்பார். இந்த ஒருநாள் மட்டுமே நடராஜரை அவ்வாறு தரிசிக்க முடியும்.

இதன்படி ஞாயிற்றுக்கிழமை நடராஜர் சிலையில் சந்தனம் களையப்பட்டு, 32 வகை மூலிகைகளால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பச்சை மரகதமேனியாய் அலங்கார கோலத்தில் அருள்பாலித்த சுவாமியை தமிழகம் முழுவதும் வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர்.

ராமநாதபுரம் மன்னர் சேதுபதி வாரிசுகள் இந்த அபிஷேக நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். திங்கள் கிழமை அதிகாலை சுவாமிக்கு மீண்டும் சந்தனம் பூசப்பட்டு நடைசாத்தப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x