Published : 05 Jan 2015 08:44 AM
Last Updated : 05 Jan 2015 08:44 AM

12-வது ஊதிய ஒப்பந்தத்தில் 50% உயர்வு கிடைக்குமா?- எதிர்பார்ப்பில் போக்குவரத்து தொழிலாளர்கள்

தமிழக அரசு போக்குவரத்துத் துறையில் உள்ள சென்னை, விழுப்புரம் உட்பட 8 போக்கு வரத்துக் கழகங்கள் மூலம் 22,636 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

மாநிலம் முழுவதும் 286 பணிமனை களில் அரசு பஸ்கள் பராமரிக்கப் படுகின்றன. போக்குவரத்துத் துறையில் ஒட்டுமொத்தமாக சுமார் 24 ஆயிரம் காலிப்பணியிடங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. தொழில்நுட்ப பிரிவில் மட்டுமே சுமார் 6 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. ‘‘ஆள் பற்றாக்குறையால் பஸ்களை சரியாக பராமரிக்க இயல வில்லை. அதனால்தான் ஜன்னல் கள் உடைந்த நிலையிலும், மழைநீர் ஒழுகும் நிலையிலும் தான் பஸ்கள் உள்ளன. சில பஸ்களில் கதவுகள் கயிறால் கட்டப்பட்டுள்ளன. அரசு விரைவு பஸ்கள் ஆங்காங்கே பிரேக் டவுன் ஆகின்றன. பஸ்களில் அடிக்கடி தீ விபத்து நடக்கின்றன’’ என தொழில்நுட்ப பிரிவு தொழி லாளர்கள் கூறுகின்றனர்.

இத்துறையில் சுமார் 4,500 பேர் ஓய்வூதிய பலன்கள் கிடைக்காமல் காத்திருக்கின்றனர். இதற்கு காரணம், போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் இயங்குவ தாக நிர்வாகம் கூறுகிறது. நிர்வாக செலவுகள் அதிகமாக இருப்பதே இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது என ஓய்வுபெற்ற போக்குவரத்து துறை அதிகாரிகள் சிலர் தெரி வித்தனர். அவர்கள் கூறியதாவது:

கிளை மேலாளர், பிரிவு மேலா ளர்கள், துணை மேலாளர்கள், பொதுமேலாளர்கள், இணை நிர்வாக இயக்குநர்கள், நிர்வாக இயக்குநர்கள் என சுமார் 5 ஆயிரம் பேருக்கு அரசு சம்பளம் வழங்கப்படுகிறது. அரசு சம்பளத்தை உயர்த்துபோது, இவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். ஆனால் ஓட்டுநர், நடத்துநர், தொழில்நுட்ப பிரிவினருக்கு பெரிய அளவில் சம்பள உயர்வு இல்லை. மொத்தம் 15 நிர்வாக இயக்குநர்கள் (ரூ.75 ஆயிரம் வரை சம்பளம்), 80 பொது மேலாளர்கள் (ரூ.65 ஆயிரம் வரை) 120 துணை மேலாளர்கள் (ரூ.55 ஆயிரம் வரை) இருக்கின்றனர். மொத்த வருவாயில் 44 சதவீதம் சம்பளத் துக்கே ஒதுக்கிவிட்டால், துறை எவ்வாறு வளர்ச்சியடையும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது தொடர்பாக போக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகளான நடராஜன் (தொமுச), சந்திரன் (சந்திரன்) ஆகியோரிடம் கேட்டபோது ‘‘12-வது ஊதிய ஒப்பந்தத்தில் 50 சதவீத ஊதிய உயர்வை கேட்டு அரசு அமைத்துள்ள குழுவுடன் பேச்சு வார்த்தை நடத்த உள்ளோம். ஓய்வூதிய பலன்கள், பணி நிரந்தரம் உள்ளிட்ட 22 அம்ச கோரிக்கைகள் குறித்தும் குழுவிடம் பேசுவோம்’’ என்றனர்.

தொழிலாளர்களுக்கு 50 சதவீத ஊதிய உயர்வு சாத்தியமா என அரசு போக்குவரத்து துறை அதிகாரிகள் தரப்பில் கேட்ட போது, ‘‘முதலில் போக்குவரத்து துறை செயல்பாடுகள், வருவாய், இழப்பு, தொழிலாளர்களின் சம்பள விகிதம் உள்ளிட்டவை குறித்து அந்தக் குழு ஆய்வு செய்யும். அதன்பிறகுதான் தொழிற் சங்கங்களுடன் புதிய ஊதிய உயர்வு குறித்தும் மற்ற கோரிக்கைகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படும். அதுவரை எதுவும் சொல்ல முடியாது’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x