Published : 03 Jan 2015 12:08 PM
Last Updated : 03 Jan 2015 12:08 PM

புத்தாண்டு தின மது விற்பனை: ஆந்திராவில் ரூ.150 கோடி, தெலங்கானாவில் ரூ.110 கோடி

புத்தாண்டு தினத்தையொட்டி, டிசம்பர் 31, ஜனவரி 1 ஆகிய 2 நாட்களில், ஆந்திராவில் ரூ. 150 கோடிக்கும், தெலங்கானாவில் ரூ.110 கோடிக்கும் மது விற்பனை நடந்துள்ளது.

புத்தாண்டு தினத்தையொட்டி கடந்த ஆண்டு ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் ரூ. 210 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது. இந்நிலையில் தெலங்கானா பிரிவினைக்குப் பின் 13 மாவட்டங்களைக் கொண்ட ஆந்திராவில் மட்டும் இந்த ஆண்டு ரூ. 150 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.

ஆந்திராவில் நாள் ஒன்றுக்கு ரூ. 23 கோடிக்கு மது விற்பனையாகிறது. இந்நிலையில் புத்தாண்டு தினத்தையொட்டி இது 8 மடங்கு அதிகரித்ததாக கலால் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

இதில் காகுளம், விஜய நகரம் மாவட்டங்களில் மட்டும் சற்று குறைவாகவும், விசாகப்பட்டினம், விஜயவாடா, குண்டூர் ஆகிய மாவட்டங்களில் எதிர்பார்த்ததை விட மிக அதிகமாகவும், ராயல சீமா மாவட்டத்தில் சற்று அதிகமாகவும் மது விற்பனை நடந்துள்ளது. புத்தாண்டு தின விற்பனைக்காகவே ஒரு வாரமாக அதிக இருப்பு வைத்திருந்தாக மதுக்கடை வியாபாரிகள் கூறுகின்றனர்.

இதேபோன்று தெலங்கானா மாநிலத்திலும் புத்தாண்டு கொண்டாட்டம் வெகு விமரிசையாக இருந்தது. புதிய மாநிலம் உதயமாகி, முதல் புத்தாண்டு என்பதால் அதிக உற்சாகம் காணப்பட்டது.

டிசம்பர் 31-ம் தேதி நள்ளிரவு 1 மணிவரை ஹைதராபாத் நகரில் பார்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனால் விடிய விடிய புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது. இம்மாநிலத்தில் உள்ள 10 மாவட்டங்களில் இந்த புத்தாண்டுக்கு ரூ. 110 கோடிக்கு மேல் மது விற்பனை நடைபெற்றதாக கலால் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x