Published : 11 Jan 2015 11:01 AM
Last Updated : 11 Jan 2015 11:01 AM

திருப்பூரில் டெங்கு காய்ச்சலுக்கு 2 குழந்தைகள் பலி? - பெற்றோர் புகார்; அதிகாரி மறுப்பு

திருப்பூர், கோல்டன் நகரில் வசிக்கும் மயில்சாமி - சரண்யா தம்பதியின் 2-வது மகள் பிருந்தா. கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்ட பிருந்தாவுக்கு, திருப்பூர் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தாள்.

இதேபோல், அதே பகுதியைச் சேர்ந்த மனோகரன் என்ற பனியன் தொழிலாளியின் 6 வயது மகள் சுபலெட்சுமி, கடந்த 27-ம் தேதி இரவு இறந்தாள்.

இது குறித்து மனோகரன் கூறியது: திருப்பூர் மாநகராட்சி, 23-வது வார்டுக்குட்பட்ட கோல்டன் நகர் பகுதியில் சுகாதார சீர்கேடு உள்ளது. என் குழந்தைக்கு கடந்த மாத இறுதியில் காய்ச்சல் வந்தது. கோவை அரசு மருத்துவமனை டாக்டர்கள் டெங்கு காய்ச்சல் தாக்கியுள்ளதாக தெரிவித்தனர். பின்னர், சிகிச்சைப் பலனின்றி கடந்த 27-ம் தேதி மகள் இறந்துவிட்டாள் என்றார்.

இது குறித்து மாநகராட்சி நகர் நல அதிகாரி செல்வகுமார் கூறியது: டெங்கு காய்ச்சலால் 2 பேர் இறக்கவில்லை. டெங்கு காய்ச்சல் என்று பெற்றோர்கள் கூறினாலும், மருத்துவமனை அறிக்கையில், டெங்கு காய்ச்சலால் இறப்பு இல்லை என்றுதான் கூறப்பட்டுள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x