Published : 08 Jan 2015 10:32 AM
Last Updated : 08 Jan 2015 10:32 AM

குழந்தையை தர மறுத்ததால் மனைவி, மாமியார் உட்பட 3 பேர் கொலை

குழந்தையை கொஞ்சுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனைவி, மாமியார் உட்பட 3 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இந்த கொலைகள் தொடர்பாக ரவுடியை போலீஸார் கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே வேலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டித்துரை. இவர் மீது கொலை, வழிப்பறி, திருட்டு வழக்குகள் உள்ளன. பாண்டித்துரையின் மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு தென்பாண்டியன் என்ற 7 மாத ஆண் குழந்தை உள்ளது. அண்மையில், கொலை வழக்கில் இருந்து ஜாமீனில் வந்த பாண்டித்துரை, பெற்றோருடன் வசிக்கும் ராஜேஸ்வரியைத் தேடிவந்து, குழந்தை தென்பாண்டியனைத் தூக்கி கொஞ்சியதுடன், தன்னுடன் அழைத்துச் செல்வதாகக் கூறியுள்ளார்.

குழந்தைக்கு அம்மை நோய் தாக்கியுள்ளதால் அழைத்துச் செல்ல வேண்டாம் என ராஜேஸ்வரியும், அவரது தாயார் தனபாக்கியமும் மறுத்துள்ளனர். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில், பாண்டித்துரை அரிவாளால் ராஜேஸ்வரியையும், தனபாக்கியத்தையும் வெட்டியுள்ளார். சம்பவ இடத்திலேயே அவர்கள் உயிரிழந்துள்ளனர். மருமகள், பேத்தியின் அலறலைக் கேட்டு கூச்சலிட்ட பாட்டி ஆறுமுகத்தம்மாளையும் பாண்டித்துரை கழுத்தில் வெட்டி படுகொலை செய்துள்ளார். பின்னர், தனது மகன் தென்பாண்டியனைத் தூக்கிக் கொண்டு சென்று, தனது தாயார் ஈஸ்வரியிடம் ஒப்படைத்துவிட்டு பாண்டித்துரை தலைமறைவானார்.

தகவலறிந்த மானாமதுரை போலீஸார் 3 பேரின் சடலங்களை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவுசெய்திருந்த தனிப்படை போலீஸார், நேற்று கள்ளர்குளம் கண்மாய்க்குள் பதுங்கியிருந்த பாண்டித்துரையைச் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x