Published : 17 Jan 2015 10:04 AM
Last Updated : 17 Jan 2015 10:04 AM

பிறந்து 7 நாட்களே ஆன ஆண் குழந்தை உடலில் திடீர் தீ: விழுப்புரம் அருகே மீண்டும் பரிதாபம்

விழுப்புரம் அருகே பிறந்து 7 நாட்களேயான ஆண் குழந்தை உடலில் திடீரென மர்மமான முறையில் தீப்பிடித்தது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள நெடிமொழியனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவருக்கும் வானூர் அருகே உள்ள பரங்கிணி கிராமத்தை சேர்ந்த கர்ணன் என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. தற்போது, அவர்கள் நெடிமொழியனூர் கிராமத்தில் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு நர்மதா என்ற 3 வயது பெண் குழந்தை மற்றும் ஒரு வயதில் ராகுல் என்ற ஆண் குழந்தை உள்ளது. கடந்த ஆண்டு குழந்தை ராகுல் உடலில் அடிக்கடி தீப்பற்றி எரிந்தது. தமிழகம் முழுவதும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குழந்தை ராகுலுக்கு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை முடிந்த பிறகு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டான்.

இந்நிலையில், ராஜேஸ்வரிக்கு கடந்த 7 நாட்களுக்கு முன் மீண்டும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பிறந்து 7 நாட்களே ஆன அந்த குழந்தையின் உடலில் நேற்று முன் தினம் மாலை தீப்பற்றி கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோரும் அந்த கிராமத்தினரும் உடனடியாக நெடிமொழியனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். பின்னர், 108 ஆம்புலன்ஸ் மூலம் விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அந்த குழந்தை அனுப்பி வைக்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு முழுவதும் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து மீண்டும் உடலில் தீ பிடிக்கிறதா என கண்காணித்தனர். இந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் சார்பாக திண்டிவனம் வட்டாட்சியர் (பொறுப்பு) கோடீஸ்வரி தலைமையில் வருவாய்த் துறை அதிகாரிகள் நேற்று நெடிமொழியனூர் கிராமம் சென்று கர்ணன் தம்பதி வசித்த குடிசை வீட்டை ஆய்வு செய்தனர். அப்பகுதி மக்களிடமும் விசாரணை நடத்தினர். பின்னர், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவரிடம் விசாரித்தனர். இந்த குழுவினர் சார்பாக மாவட்ட நிர்வாகத்திடம் விரைவில் அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. அதன்பிறகு, குழந்தையின் நிலைமை குறித்து முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது. ஏற்கெனவே, கடந்த ஆண்டு உடலில் தீப்பிடித்து தமிழகம் முழுவதும் பரபரப்பு ஏற்படுத்திய குழந்தை ராகுலின் உடன் பிறந்த தம்பி என்பதால் மரபு ரீதியிலான பாதிப்பா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x