Published : 04 Jan 2015 01:36 PM
Last Updated : 04 Jan 2015 01:36 PM

மதிமுகவின் மதுவிலக்கு மராத்தான்: சென்னையில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு

சென்னையில் மதிமுக ஏற்பாடு செய்திருந்த 'மதுவிலக்கு மராத்தான்' போட்டியில், மாணவர்களும் இளைஞர்களும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

இது குறித்து மதிமுக வெளியிட்ட தகவலில், 'மதுப்பழக்கத்தை அறவே ஒழிக்க வேண்டும் என்ற மன நிலையை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்காக மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில், மதுவிலக்கு மராத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தப் போட்டி காலை 6.30 மணிக்கு சென்னை, அண்ணா சாலை, சிம்சன் அருகில் உள்ள பெரியார் சிலை அருகே சிவானந்தா சாலையில் தொடங்கி மெரினா கடற்கரை வழியாக கலங்கரை விளக்கம் (லைட் ஹவுஸ்) அருகே நிறைவு பெற்றது.

6-ம் வகுப்பு மாணக்கர்கள் தொடங்கி 25 வயது இளைஞர்கள், பெண்கள் வரை 7 பிரிவுகளில் நடந்த இந்தப் போட்டியில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு இலக்கை நோக்கி மராத்தான் சென்றனர்.

5 கி.மீ. தொலைவுக்குள் பல இடங்களில் தேவைப்படும் முதலுதவி வழங்க மருத்துவர்களும், ஆம்புலன்ஸ் வாகனங்களும் சேவை புரியும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

மதுவிலக்கு மராத்தானில் சிறுவர்களுடன் மதிமுக பொதுச் செயலர் வைகோ. | படம்: ஆர்.ரகு

அனைத்துப் போட்டிகளும் நிறைவு பெற்றதும் 7 பிரிவுகளில் வெற்றி பெற்ற 35 நபர்களுக்கும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பரிசுத் தொகை வழங்கி பாராட்டுத் தெரிவித்தார்.

ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு ரூ.25,000/-, இரண்டாம் பரிசு ரூ.15,000/-, மூன்றாம் பரிசு ரூ.10,000/-, நான்காம் பரிசு ரூ.7,000/- மற்றும் ஐந்தாம் பரிசு ரூ.5,000/- வீதம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. மேலும் போட்டியில் பங்கேற்று நிறைவு செய்த அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது என்று மதிமுக செய்திக் குறிப்பு தெரிவித்தது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x