Published : 09 Apr 2014 11:48 AM
Last Updated : 09 Apr 2014 11:48 AM

மதுரை அருகே திருமலை நாயக்கரின் அரிய கற்சிற்பங்கள்: உசிலம்பட்டி அருகே கள ஆய்வின்போது கண்டுபிடிப்பு

மதுரை உசிலம்பட்டி அருகே மதுரையை ஆண்ட திருமலை நாயக்க மன்னன் வேட்டைக்குச் செல்லும் அரிய சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் ம.திருமலை தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு நல்கைத் திட்டமான “தென்கல்லக நாட்டின் தொன்மையும் சிறப்பும்” என்ற ஆய்வுத்திட்டக் களப் பணிக்காக தமிழ்ப் பல்கலைக் கழகக் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல்துறை உதவிப் பேராசி ரியர் முனைவர் பா.ஜெயக்குமார் மேற்கொண்ட கள ஆய்வின்போது இந்த அரிய கற்சிற்பங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது குறித்து முனைவர் திருமலை தெரிவித்துள்ளதாவது:

“தமிழகத்தில், மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்த நாயக்க மன்னர் களில் சிறந்தவராகக் கருதப்படும் திருமலை நாயக்கரின் (கி.பி.1623- 1659) இரு கற்சிற்பங்கள் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், கொடிக்குளத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

திருமலை நாயக்கர் சிறந்த போர்வீரனாகவும், குதிரை ஏற்றத் திலும், வேட்டையாடுவதிலும் சிறந்த வராகவும் இருந்துள்ளார். மதுரை நகரை ஒட்டிய அடர்ந்த காடு, மலை பகுதிகளான நாகமலை, மேலக்கால், விக்கிரமங்கலம் மற்றும் கொடிக்குளம் பகுதிகளில் திருமலை நாயக்கர் அடிக்கடி வேட்டையாடிய செய்திகள் ஏற்கெனவே சில செப்புப் பட்டயங்களில் காணப்பட்டுள்ளன. மேலும், இந்தக் காட்டில் உள்ள புலிகளால் பொதுமக்களுக்கு மிகுந்த தொல்லை இருந்ததாக சான்றுகள் தெரிவிக்கின்றன.

நேர்த்தியான, கனமான கற்பல கைகளில் நாயக்கர் காலக் கலை நுட்பத்துடன் சிற்பங்கள் இரண்டும் வடிக்கப்பட்டுள்ளன. சுமார் 400 ஆண்டுகள் மண்ணில் புதைந்து கிடந்ததால் முகத்தில் சற்று தேய் மானம் ஏற்பட்டுள்ளது.

ஒரு சிற்பத்தில் உயர்ரக வகை யைச் சேர்ந்த, கம்பீரமான தோற்றத் தையுடைய ஆண் குதிரையின் மீது அமர்ந்துள்ள மன்னன் திருமலை, விறைப்புடன் கூடிய அக்குதிரை யைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவருவது போலவும், கீழே நிற்கும் பணியாள் மன்னனுக்கு உதவுவது போலவும் காட்டப்பட்டுள் ளன. அருகில், பெண் ஒருவர் அச்சத்துடன் நிற்பதுபோலவும், நாய் ஒன்றும் காட்டப்பட்டுள்ளன. இச்சிற்பம் மன்னன் குதிரை ஏற்றத்தில் சிறந்தவர் என்பதைக் காட்டுவதோடு, குதிரையில் வேட்டைக்குச் செல்கின்ற காட்சியையும் நினைவூட்டுவதாக உள்ளது.

அடுத்த சிற்பத்தில் மன்னன் திருமலை நடந்து செல்வதுபோலவும், வில்லின் நாணினை இழுத்து அம்பினை எய்துவது போலவும் காட்டப்பட்டுள்ளன. மன்னனின் வலப்பக்கத் தோளின் பின்புறம் தூணி (அம்புகள் வைக்கும் கூடு) காட்டப்பட்டுள்ளது. இச்சிற்பத்தில் ஒரு பெண் அச்சமுடன் மன்னனின் பின்னால் செல்வது போலவும் காட்டப்பட்டுள்ளது.

இரண்டு சிற்பங்களிலும் மன்ன னின் தோற்றம் மற்றும் ஆடை அணிகலன்கள் ஒரு சராசரி மனி தனுக்கான தோற்றமல்லாது, அரசனுக் குரிய தோற்றத்தைக் காட்டுகின்றன. நாயக்கர் காலச் சிற்பக்கலை பாணிக்கு இவ்விரு சிற்பங்களும் சிறந்த சான்றுகளாகும்.

திருமலை நாயக்கரைக் குதிரை வீரராகவும் வேட்டையாடுபவராக வும் வெளிப்படுத்தும் சிற்பங்கள் கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதல் முறை எனத் தெரிவித்துள்ளார் துணைவேந்தர் திருமலை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x