Published : 18 Jan 2015 11:10 AM
Last Updated : 18 Jan 2015 11:10 AM

ஒரே நாளில் 50 ஆயிரம் பேர்: களைகட்டியது புத்தகக் காட்சி

காணும் பொங்கல் தினமான நேற்று 50 ஆயிரம் பேர் பார்வை யிட்டதால் சென்னை புத்தகக் காட்சி திருவிழாக்கோலம் பூண்டது.

தென்னிந்திய புத்தக விற் பனையாளர்கள் மற்றும் பதிப் பாளர்கள் சங்கம் (பாபாசி) சார்பில் சென்னையில் ஆண்டு தோறும் புத்தகக் காட்சி நடத்தப்பட்டு வருகிறது. 38-வது ஆண்டு புத்தகக் காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் கடந்த 9-ம் தேதி தொடங்கி வரும் 21-ம் தேதி வரை நடக்கிறது. இதில் 350 புத்தக வெளியீட்டு நிறுவனங்கள் சார்பில் 700 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன.

காணும் பொங்கல் தினமான நேற்று புத்தகக் காட்சியை பார்வையிட ஏராளமானோர் குவிந்தனர். இதுகுறித்து ‘பபாசி’ தலைவர் மீனாட்சி சோமசுந்தரம் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

புத்தகக் காட்சி தொடங்கிய நாள் முதல் இதுவரை 4 லட்சம் பேர் வந்துள்ளனர். பொங்கல் தினத்தில் இருந்து கடந்த 3 நாட்களாக அதிக அளவில் கூட்டம் வருகிறது. காணும் பொங்கல் நாளில் மட்டும் 50 ஆயிரம் பேர் வந்தனர். கண்காட்சி முடிவதற்குள் 8 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். கடந்த ஆண்டு 7 லட்சம் பேர் வந்தனர்.

வெளியூர்களில் இருந்து வரும் வாசகர்களின் வசதிக்காக, அவர்கள் வாங்கும் புத்தகத்தை அவர்களது வீட்டுக்கு அனுப்பி வைக்க கூரியர் வசதி செய்யப் பட்டுள்ளது. புத்தகக் காட்சி வளாகத்தில் 2 வங்கிகளின் ஏடிஎம் அமைக்கப்பட்டுள்ளது. தினமும் வருபவர்களுக்காக ரூ.50 சீசன் டிக்கெட் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

புத்தகக் காட்சியில் ‘தி இந்து’ நாளிதழ் சார்பில் சேரன் செங்குட்டுவன் வீதியில் 143-ஏ, 143-பி ஆகிய 2 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்குள்ள புத்தகங்களை ஏராளமானோர் ஆர்வத்தோடு பார்த்து வாங்கிச் சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x