Published : 27 Jan 2015 09:00 AM
Last Updated : 27 Jan 2015 09:00 AM

ராஜபாளையத்தில் தொடரும் மர்மக் காய்ச்சல்: 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் மர்மக் காய்ச்சல் தொடர்கிறது. இக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 30-க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ராஜபாளையம் நகராட்சிப் பகுதியில் வீட்டு வசதி வாரிய வீடுகள், திருவள்ளுவர் நகர், ராம் நகர், சக்தி நகர், தென்றல் நகர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அடுத்தடுத்து மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். இப்பகுதிகளில் ஏராளமான கொசுக்கள் உற்பத்தி ஆனதே காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது.

திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த சங்கர் என்பவரது மகள் ஹன்சினி(5) மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இச்சிறுமி கடந்த மாதம் 20-ம் தேதி காய்ச்சல் அதிகரித்து ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்தார். ஹன்சினியைத் தொடர்ந்து, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜபாளையம் எம்.ஆர். நகரைச் சேர்ந்த உத்தண்டம் என்பவரது மகள் கார்த்திகா(10) என்ற சிறுமி கடந்த 25-ம் தேதி இறந்தார். அவரைத் தொடர்ந்து, மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ராஜபாளையம் அழகை நகரைச் சேர்ந்த பால்பாண்டி என்பவரது மகள் சிவசந்தியா என்ற 3 வயது சிறுமியும் இறந்தார்.

அதைத் தொடர்ந்து, திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மம்சாபுரம் மீனாட்சி தோட்டத் தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஜெயக்குமாரின் மகன் செல்வகணேஷ்(2), ராஜபாளையம் பண்டிட் சுப்பையா தெருவைச் சேர்ந்த முருகேசன் என்பவரது ஒன்றரை வயது மகன் சுந்தரபாண்டியன், துரைசாமியாபுரத்தைச் சேர்ந்த குருசாமியின் மகன் கார்த்திக்(15), ராஜபாளையம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சரவணன் என்பவரது மகள் அனு(4), மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவது மகள் வனிதா(22), அருப்புக்கோட்டை அருகேயுள்ள ஆத்திப்பட்டியைச் சேர்ந்த பூமிராஜ் மகன் வெற்றிவேல்(3) எனக் கடந்த வாரம் வரை அடுத்தடுத்து 16 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் சிறுவர், சிறுமிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

டெங்கு காய்ச்சலால் ஏற்பட்ட உயிரிழப்பு காரணமாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், செய்தி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் ராஜாராமன், மாநில சுகாதாரத் திட்ட இயக்குநர் சண்முகம், நகராட்சி நிர்வாக ஆணையர் பிரகாஷ் ஆகியோர் ராஜபாளையத்தில் தொடர்ந்து 5 நாள்கள் முகாமிட்டு கொசு ஒழிப்பு மற்றும் சுகாதாரப் பணிகளை மேற்கொண்டனர்.

இருப்பினும் மர்மக் காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை இதுவரை 21 ஆக உயர்ந்துள்ளது. அதையடுத்து, ராஜபாளையும் அரசு மருத்துவமனையில் அனைத்து நவீன கருவிகளும் பொருத்தப்பட்டு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந் நிலையில், வைரஸ் காய்ச்சல் மற்றும் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ள 30-க்கும் மேற்பட்டோருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மேலும் 4 பேர் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைபெற்று வருகின்றனர். டெங்கு காய்ச்சலை உருவாக்கும் கொசுக்களை அழிப்பது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் இலவசமாக நிலவேம்பு கசாயமும் வழங்கப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x