Published : 05 Jan 2015 11:15 AM
Last Updated : 05 Jan 2015 11:15 AM

ஓடும் ரயிலில் பயங்கரம்: பயணியின் தலையில் வெட்டி பணம் கொள்ளை

கோடம்பாக்கத்தில் ஓடிக் கொண்டிருந்த புறநகர் மின்சார ரயிலில் பயணியின் தலையில் வெட்டி பணம் கொள்ளையடிக் கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் அண்ணனூரை சேர்ந்தவர் ராகேஷ் பாரதி (40). இவர் தாம்பரம் ரயில் நிலையத்தில் ஊழியராக இருக்கிறார். நேற்று முன்தினம் பணி முடிந்து இரவு 11.30 மணிக்கு கடற்கரை செல்லும் மின்சார ரயிலில் ஏறினார். முதல் வகுப்பு பெட்டியில் அவர் பயணம் செய்தார். நள்ளிரவு நேரம் என்பதால் ரயிலில் கூட்டம் குறைவாக இருந்தது.

கோடம்பாக்கம் ரயில் நிலையத்தில் அந்த பெட்டியில் 3 பேர் ஏறியுள்ளனர். கோடம்பாக்கத்தில் இருந்து ரயில் புறப்பட்டதும் அவர்கள் மூவரும் ராகேஷ் பாரதியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி கையிலிருந்த பணத்தை கொடுக்கும்படி கேட்டனர். ராகேஷ் பாரதி கொடுக்க மறுக்கவே, அவரது தலையில் 3 முறை வெட்டினர். பின்னர் அவரிடமிருந்த பர்ஸை பிடுங்கி அதிலிருந்த 300 ரூபாயை எடுத்துக் கொண்டனர். பின்னர் அவர் வைத்திருந்த செல்போனையும் பறிக்க முயன்றனர். அதற்குள் ரயில், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு வந்ததால் 3 பேரும் இறங்கி தப்பி ஓடினர்.

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இறங்கிய ராகேஷ் பாரதி, அங்கிருந்த ரயில்வே ஊழியரிடம் நடந்த சம்பவங்களை கூறியுள்ளார். உடனடியாக அங்கு சென்ற ரயில்வே போலீஸார், ராகேஷ் பாரதியை சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தையல் போட்டனர்.

பாதுகாப்பில்லாத ரயில் பயணம்

சென்னையில் கடந்த 29-ம் தேதி கோட்டை ரயில் நிலையம் அருகே முனீஸ்வரி என்ற பெண்ணிடம் செயினைப் பறித்த கொள்ளையன், அவரை ரயிலில் இருந்து கீழே தள்ளி விட்டான். இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளி இன்னும் கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில் தற்போது ரயிலில் மற்றுமொரு கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. இது ரயில் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் மது அருந்திவிட்டு, பெண் மருத்துவர் உட்பட 3 பெண்களை ஆபாசமாக பேசிய அரசியல்வாதிகள், முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண் ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ்காரர் என பெண்களுக்கு எதிரான குற்றங்களும் ரயில்களில் அதிகமாக நடக்கின்றன.

இதுகுறித்து ரயில் பயணிகள் சிலர் கூறும்போது, “புறநகர் மின்சார ரயில்களில் பாதுகாப்பில்லாத பயணத்தைத் தான் தினமும் நாங்கள் எதிர்கொள்கிறோம். இவை அனைத்தும் ரயில்வே போலீஸாருக்கு நன்றாக தெரிந்தும் அவர்கள் தூங்கி கொண்டு இருக்கிறார்கள்” என்றனர்.

ரயில்களில் தினமும் நடக்கும் திருட்டு, கொள்ளை, பாலியல் குற்றங்கள் ஆகியவற்றை தடுக்க ரயில்வே போலீஸார் தீவிர நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்பது பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x