Published : 16 Jan 2015 11:32 AM
Last Updated : 16 Jan 2015 11:32 AM

தமிழகம் முழுவதிலும் டெங்கு தடுப்புப் பணியில் 77,468 பேர் தீவிரம்

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணியில் உள்ளாட்சித் துறைகளைச் சேர்ந்த 77,468 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம்: தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, தமிழக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச் சாலை துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் நேற்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இதில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலர் க. பனீந்திர ரெட்டி, சென்னை மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர், சென்னை பெருநகரக் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண் இயக்குநர் சந்திரமோகன், நகராட்சி நிர்வாக இயக்குநர் ஜி. பிரகாஷ், பேரூராட்சிகளின் இயக்குநர் ராஜேந்திர ரத்னூ, அனைத்து மாநகராட்சி ஆணையர்கள், நகராட்சிகளின் மண்டல நிர்வாக இயக்குநர்கள், தலைமைப் பொறியாளர், கண்காணிப்புப் பொறியாளர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் இயக்குநர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

இதில், ‘கடந்த ஆண்டுகளைக் காட்டிலும், தற்போது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு என்றாலும், டெங்கு நோயை முற்றிலும் ஒழிக்க போர்க்கால நடவடிக்கைகளை தீவிரமாக தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்’ என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.

இதற்கு, ‘டெங்கு தடுப்பு நடவடிக்கைக்காக தமிழகம் முழுவதிலும் மொத்தம் 4,855 குழுக்கள் அமைக்கப்பட்டு, 77,348 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், குடியிருப்புப் பகுதிகளில் லார்வா உற்பத்தியைத் தடுக்க நகராட்சிப் பகுதிகளுக்கு 3,648 பேரும், சென்னை தவிர மற்ற மாநகராட்சிப் பகுதிகளுக்கு 1,763 பேரும் கூடுதலாக பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்’ என்று அமைச்சரிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x