Published : 18 Jan 2015 01:11 PM
Last Updated : 18 Jan 2015 01:11 PM

பெரம்பலூர் மாவட்டத்தில் இரு விபத்துகளில் 8 பேர் பலி

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று நிகழ்ந்த இரு விபத்துகளில் 8 பேர் உயிரிழந்தனர். மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்தவர் நாராயணசாமி (67). ஓய்வு பெற்ற கருவூல அலுவலர். இவரது மனைவி பாக்கியலட்சுமி(59). இவர்கள் காஞ்சிபுரத்தில் வசித்து வந்தனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊரான திருமங்கலத்துக்கு உறவினர்களுடன் வந்த நாராயணசாமி, பின்னர் கார் மூலம் நேற்று காலை காஞ்சிபுரம் புறப்பட்டார். மதுரையைச் சேர்ந்த பாண்டியராஜன்(41) காரை ஓட்டியுள்ளார்.

பெரம்பலூர் அருகேயுள்ள சிறுவாச்சூர் மலையப்ப நகர் பகுதியில் வந்தபோது, முன்னால் சென்று கொண்டிருந்த லாரி திடீரென வலதுபுறமாகத் திரும்பியுள்ளது. இதனால் பின்னால் வந்து கொண்டிருந்த கார் நிலைகுலைந்து லாரி மீது மோதியது. இதில் நாராயணசாமி, பாக்கியலட்சுமி, இவர்களது மருமகள் சித்ரா (25) ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த கார் டிரைவர் பாண்டியராஜன் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையிலும், சித்ராவின் 9 மாத குழந்தை பிரித்திவிக் தனியார் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சோனல் சந்த்ரா மற்றும் போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். விபத்து குறித்து பெரம்பலூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, லாரி டிரைவர் ஒகளூர் மாணிக்கத்தை(45) கைது செய்தனர்.

3 இளைஞர்கள் பலி

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகேயுள்ள அசூரைச் சேர்ந்த மணிவேல் மகன் வேல்முருகன் (20), ரவிச்சந்திரன் மகன் ஸ்ரீதர் (20), முத்து மகன் ரவிக்குமார் (25) ஆகியோர் நேற்று பிற்பகல் ஒரே மோட்டார் சைக்கிளில் அசூரிலிருந்து குன்னத்துக்கு வந்து கொண்டிருந்தனர். வேல்முருகன் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டியுள்ளார்.

குன்னம் அருகே வந்தபோது, திடீரென நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் சாலையோரமுள்ள மரத்தில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த 3 பேரும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து குன்னம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x