Published : 22 Jan 2015 10:01 AM
Last Updated : 22 Jan 2015 10:01 AM
ஏற்றத்தாழ்வை அதிகரிக்கும் பொருளாதார கொள்கைகளை புறந்தள்ளிவிட்டு, சமூக முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் கல்வி, சுகாதாரம், விவசாயம் ஆகிய துறைகளுக்கு அதிக நிதி ஒதுக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
‘தெற்காசியாவில் சமத்துவமின்மையை போக்குதல்’ என்ற தலைப்பில் உலக வங்கி வெளியிட்டுள்ள பொருளாதார ஆய்வறிக்கையில், இந்தியாவில் ஏழை களுக்கும் பணக்காரர்களுக்கும் இடையி லான எல்லையில்லாத ஏற்றத்தாழ்வுகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில்தான் பணக்காரர்கள் அதிக அளவிலான சொத்துக்களை குவித்து வைத்துள்ளனர். அதேநேரத்தில் ஏழைகள் மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளனர் என்பதுதான் அந்த அறிக்கை சொல்லும் உண்மையாகும்.
2012-ம் ஆண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு சுமார் ரூ.95 லட்சம் கோடியாகும். அதில் சுமார் 12 சதவீதம் சொத்துக்கள் அதாவது, ரூ.11.34 லட்சம் கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பெரும் பணக்காரர்கள் 55 பேரிடம் உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் பணக்காரர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், அவர்களின் சொத்து மதிப்பு அந்நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் 5 சதவீதம் என்ற அளவில் மட்டுமே உள்ளது.
உலகில் உள்ள ஏழைகளில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியாவில்தான் உள்ளனர். இந்திய மக்களில் 77 சதவீதம் பேர் ஒரு நாளைக்கு ரூ.20-க்கும் குறைவாகவே வருமானம் ஈட்டுகின்றனர். இங்கு பொருளாதார ஏற்றத்தாழ்வு எந்த அளவுக்கு தலைவிரித்தாடுகிறது என்பதற்கு இதைவிட சிறந்த எடுத்துக்காட்டு இருக்க முடியாது.
இவற்றையெல்லாம் பார்க்கும்போது இந்தியா ஏழைகள் வாழ்வதற்கு தகுதியற்ற நாடா என்ற கேள்விதான் எழுகிறது. இதற்கெல்லாம் காரணம் சுகாதாரத்துக்கு போதிய நிதி ஒதுக்க மத்திய, மாநில அரசுகள் மறுப்பதுதான். எனவே, ஏற்றத்தாழ்வை அதிகரிக்கும் பொருளாதார கொள்கைகளை புறந்தள்ளிவிட்டு, சமூக முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் கல்வி, சுகாதாரம், விவசாயம் ஆகிய துறைகளுக்கு அதிக நிதி ஒதுக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT